அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் தியாகராஜன். நல்லாசிரியர் விருது பெற்றவர். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். கடைசி மகள் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தனது சொந்த கிராமமான விளாங்குடியில் குடிநீர்பஞ்சம் தலைவிரித்தாடியது. இதனை கண்ட ஆசிரியர் தியாகராஜன் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், ஏரிகளை தூர்வார தனது மகளிடம் உதவி கோரினார். விளாங்குடி கிராமத்தில் உள்ள 6 ஏரிகளில் தனது சொந்த செலவில் தூர்வார அனுமதி பெற்றவர். முதற்கட்டமாக 64 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிள்ளையார் குளம் ஏரியை ரூ.5 லட்சம் செலவிலும் அதற்கடுத்த ஆண்டு, மேலும் இரண்டு பெரிய ஏரிகளை ரூ.4லட்சம் செலவிலும் தூர் வாரினார்.

நடப்பாண்டில் ரூ.2 லட்சம் செலவில் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட தொண்டன் ஏரியை சீரமைக்கும் முயற்சியாக கருவேல மரங்கள், காட்டாமணக்குகள் போன்றவைகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏதுவாக சீரமைத்துள்ளார்.
இது குறித்து விளாங்குடி கிராம பொதுமக்கள் கூறுகையில், ஆசிரியரின் பணியால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் அருகே உள்ள விவசாய நிலங்களில் நெல்சாகுடி செய்து விவசாயிகள் பயனடைந்து உள்ளதாகவும் பெருமையுடன் கூறினர்.