இதுகுறித்து, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ராகேஷ் சிங்காய் கூறியதாவது: அக்னிபத் திட்டத்தின் கீழ், நாட்டின் தற்போதைய பாதுகாப்புத் தேவைகளை கருத்தில் கொண்டு குறுகிய கால அடிப்படையில், ஆயுதப் படைகளில் அக்னி வீரர்கள் சேர்க்கப்படுகின்றனர். நாட்டைப் பாதுகாக்கும் அக்னி வீரர்கள், தங்களது வாழ்க்கையின் பொன்னான நான்கு ஆண்டுகளை ராணுவத்தில் செலவிடுகின்றனர். இதனால் அவர்களால் பல நேரங்களில் படிப்பைத் தொடர முடிவதில்லை.
ராணுவத்தில் பணியாற்றிய பிறகு அவர்கள் உயர்கல்வியை நிறைவு செய்து, நல்ல வேலைவாய்ப்பைப் பெற்று, புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, எங்கள் பல்கலைக்கழகத்தில் அவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் 100 சதவீதம் சலுகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச அரசால் 1964-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த பல்கலைக்கழகம் வழங்கும் சுமார் 200 படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் முன்னாள் அக்னி வீரர்கள் சேர்க்கை பெறுவதில் வெற்றி பெற்றால், அவர்களுக்கு 100 சதவீத கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்படும்.
அக்னிவீரர்கள் நான்கு ஆண்டுகள் பணியை நிறைவு செய்திருக்க வேண்டும். பணிக்காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லது ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் இந்தக் கல்விக் கட்டணச் சலுகையைப் பெற தகுதியற்றவர்கள் ஆவர். இந்தக் கட்டணச் சலுகைக்கு எந்த உச்சவரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. தகுதியுள்ள அனைத்து முன்னாள் அக்னி வீரர்களும் இந்தச் சலுகையைப் பெறுவார்கள்.
எதிர்காலத்தில், முன்னாள் அக்னி வீரர்களுக்கு மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்தும் பல்கலைக்கழகம் பரிசீலிக்கலாம். மேலும், அவர்களுக்காக சிறப்பு படிப்புகளையும் உருவாக்கலாம்.
முப்படைகளிலும் பணியாற்றும் வீரர்களின் குழந்தைகளுக்கு ஏற்கனவே பல்கலைக்கழக கல்விக் கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்படுகிறது. வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குழந்தைகள் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு 100 சதவீத கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. இவ்வாறு துணைவேந்தர் தெரிவித்தார்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...