Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

“21ம் நூற்றாண்டு அறிவுசார் சமுதாயமாக அமைய வேண்டும்” - சசி தரூர்


           மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சசி தரூர், சமீபத்தில் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நடத்திய கருத்தரங்கில் பேசியதாவது:

         உலகளவில், ஒட்டுமொத்த உற்பத்திப் பொருளாதார அடிப்படையில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது. எனினும், வாங்கும் திறன் பொருளாதார அடிப்படையில், ஜப்பானைப் பின் தள்ளி விட்டு இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. எனினும் பொருளாதார வல்லுனர்கள் கூறி வருவதை போல், இனி வரும் காலங்களில் தான், இந்தியாவின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாக இருக்கும்.

          பொருளாதார முன்னேற்ற அடிப்படையில் நமக்கு சவால் விடுக்கும் சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில், இளைஞர்கள் எண்ணிக்கை சரிவைச் சந்திக்கும் காலத்தில், இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டிருக்கும்.

           சர்வதேச தொழிலாளர் அமைப்பு மேற்கொண்டுள்ள கணிப்பின் படி, 2020ம் ஆண்டில், இந்தியாவில், 20 முதல் 24 வயதுடையவர்களின் எண்ணிக்கை, 11.6 கோடியாக உயர்ந்திருக்கும். அதேகால கட்டத்தில் சீனாவில் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 9.4 கோடியாக இருக்கும். அந்த வகையில், எதிர் வரும் காலத்தில், இளைஞர் சக்தி இந்தியாவுக்கு மிகப் பெரிய பலமாக இருக்கும். இது ஒருபுறம் என்றால், 2020ல், இந்தியாவில் உள்ளவர்களின் வயது சராசரி (ச்திஞுணூச்ஞ்ஞு ச்ஞ்ஞு) 29 ஆக இருக்கும். அதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் வயது சராசரி 40 ஆகவும், ஜப்பானியர்களின் வயது சராசரி 46 ஆகவும், ஐரோப்பியர்களின் வயது சராசரி 47 ஆகவும் இருக்கும். எனினும், இப்போதே இந்தியாவில் உள்ளவர்களில் 60% பேர் 15 முதல் 65 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர். நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது, நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் தொகையை விட வயது சரசரியே முக்கிய காரணியாக இருக்கும்.

           வளம், பொருளாதாரம் இல்லாத போதிலும், சுதந்திரத்திற்கு பிந்தைய 65 ஆண்டு காலத்தில், நாட்டின் கல்வியமைப்பு விரிவடைந்துள்ளது. தொழில்நுட்ப, மனிதவளம் மிக்க, தத்துவ அறிவுடைய, கற்பனை வளம் மிக்க இளைஞர் கூட்டத்தை இந்தியா உருவாக்கியுள்ளது. கடந்த 1950ம் ஆண்டு, இந்தியாவில் 30 பல்கலைக்கழகங்க்களும், 700 கல்லூரிகளும் மட்டுமே இருந்தன. இவற்றில் 4 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்றனர்.

              எனினும், அடுத்த 60 ஆண்டுகளில், நாட்டின் கல்வியமைப்பு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டிப் பிடித்தது. தற்போது இந்தியாவில் 600 பல்கலைக்கழகங்களும், 35 ஆயிரம் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில், 2 கோடி மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இந்த வளர்ச்சியடைந்த எண்ணிக்கை, கல்வியின் தரம், உயர் கல்வியின் நிபுணத்துவத்திற்கு இணையாக இல்லை என்பது உண்மை தான். ஆனால் இங்கு உள்ளவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, உயர் கல்வி தொடர்பான விஷயங்களுக்கு இந்திய அரசு முன்னுரிமை வழங்கியது என்பதைத் தான்.

               விரிவாக்கம், சமத்துவம், உயர்வு, வேலை வாய்ப்பு ஆகிய 4 காரணிகளைக் கொண்டே இந்தியாவின் வளர்ச்சியை நான் பார்க்கிறேன். இதில் முதலாவதாக விரிவாக்கம்... மக்கள்தொகை வளர்ச்சி என்ற விஷயம் நமக்கு சாபமாக மாறி விடக் கூடாது. இதை கருத்தில் கொண்டு கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் அனைவருக்கும் உயர் கல்வி சாத்தியமாகி உள்ளது.

              கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்திய பின்னர், தொடக்க கல்வியில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை விகிதம் 104 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதற்கு காரணம், நாங்கள் எதிர்பார்த்ததை விட, ஏராளமான குழந்தைகள் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இதில் இருக்கும் சவால் என்னவென்றால் இதே அளவு, உயர் கல்வியிலும் வளர்ச்சி பெற வேண்டும் என்பது தான். அந்த வகையில், சர்வதேச அளவில் உயர் கல்வி சேர்க்கை எண்ணிக்கை விகிதம் 29 சதவிகிதமாக இருந்தாலும், நம் நாட்டில் அந்த எண்ணிக்கை தற்போது வெறும் 18 சதவீதம் ஆகவே உள்ளது.

             இந்தியாவைப் பொறுத்தவரை 21ம் நூற்றாண்டு என்பது, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும். அந்த சமுதாயம், கோட்பாட்டு அறிவுத்திறன் உடையதாகவும், அதில் இருந்து பயனடைவதாகவும் இருக்க வேண்டும். அணுகுதல், உள்கட்டமைப்பு, ஆதரவு போன்றவை இல்லாத காரணத்தால், அந்த சமூகத்தின் கற்கும் திறன் அல்லது படைப்பாற்றல் எந்த வகையிலும் குறைந்து விடக் கூடாது.

               நாம் பேசிக் கொண்டிருப்பது ஒரு அறிவுசார் சமுதாயத்தை பற்றி என்பதை அனைவரும் உணர வேண்டும். இருப்பினும் ஒவ்வொரு மட்டத்திலும் அறிவுப் பரவலுக்கான செயல்முறையில், நம் வேலைவாய்ப்பு திறனும் உயர வேண்டும் என சந்தை சக்திகள் வலியுறுத்தும். ஏனென்றால், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இந்திய கல்விக் கொள்கையின் புதிய காரணியாக உருவெடுத்துள்ளது. என்னைப் பொறுத்தவரை இந்தக் காரணி, கொள்கை சார்புக்கு இன்றியமையாதது என்பதால் அதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive