NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

20 ஆயிரம் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை எழுதுவதில் சிக்கல்

         20 ஆயிரம் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை எழுதுவதில் சிக்கல்: கணக்கெடுப்பில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம்

          தமிழ் அல்லாத பிற மொழியை, முதல் பாடமாக படிக்கும் மாணவர்கள், 20 ஆயிரத்தை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள், 2016ல், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இது குறித்த விவரங்களை, ஒவ்வொரு பள்ளி வாரியாக சேகரிக்க, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம்,உத்தரவிட்டுள்ளது.
 
       கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தின் கீழ், 2016, மார்ச் - ஏப்ரலில் நடக்கும் 10ம் வகுப்பு பொது தேர்வை, அனைத்து மாணவ, மாணவியரும், முதல் பாடமாக, தமிழ் தேர்வை எழுத வேண்டும். தற்போது, எட்டாம் வகுப்பை முடித்துள்ள மாணவர்கள், 2016ல், 10ம் வகுப்பு தேர்வை எழுதுவர்.தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளில், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர், முதல் பாடமாக, தமிழ் அல்லாத பிறமொழி பாடத்தை தேர்வு செய்து, படித்து வருகின்றனர்.இவர்கள், '2016ல், தமிழ் தேர்வை எழுதியே ஆக வேண்டும்' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை, திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். இதனால், பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.தமிழக அரசின் கிடுக்கிப்பிடி உத்தரவு காரணமாக, தமிழ் அல்லாத பிற மொழியை, முதல் பாடமாக எடுத்து படித்து வரும் மாணவ, மாணவியரின் பெற்றோர், கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.சென்னை உட்பட, பல மாவட்டங்களில், இந்தியை முதல் பாடமாக படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, கணிசமாக இருப்பதாக, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
 
        இதுகுறித்து, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு, இயக்குனர், பிச்சை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கடந்த, 2006 - 07ல், முதல் வகுப்பில், தமிழ் படிக்க ஆரம்பித்த மாணவ, மாணவியர், 2015 - 16 தேர்வில், மொழிப் பாடமாக, தமிழ் தேர்வை எழுத வேண்டும்.இதுகுறித்த விவரங்களை, அனைத்து மெட்ரிகுலேஷன் மற்றும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி தாளாளர்களின் கவனத்திற்கு, மீண்டும் கொண்டு செல்ல, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், நடவடிக்கை எடுக்க வேண்டும்.நடந்து முடிந்த (2013 - 14) ஆண்டில், அனைத்துப் பள்ளிகளிலும், எட்டாம் வகுப்பு வரை, தமிழ் கட்டாய பாடமாக அமல்படுத்தப்பட்டதா என்பதை உறுதி செய்து, இயக்குனரகத்திற்கு, அறிக்கை அளிக்க வேண்டும்.இதர மொழியை, முதல் பாடமாக அமல்படுத்தும் பள்ளியின் பெயர்; வகுப்பு வாரியாக, எந்தெந்த பிற மொழிகளில், பாடம் நடத்தப்படுகிறது; வகுப்பு வாரியாக, பிற மொழியை, முதல் பாடமாக எடுத்து படிக்கும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை ஆகியவற்றை சேகரித்து, இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.இதையடுத்து, பிற மொழியை, முதல் பாடமாக படிக்கும் மாணவ, மாணவியர் விவரங்களை சேகரிக்கும் பணியில், மாவட்ட கல்வி அதிகாரிகள், தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.பிற மொழியை, முதல் பாடமாக படிக்கும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை குறித்த, சரியான புள்ளி விவரம், ஜூன், 10 தேதிக்குள் கிடைத்து விடும் என, துறை வட்டாரம் தெரிவித்தது.
 
சட்டத்தை மதிக்காதபள்ளிகளுக்கு 'நோட்டீஸ்!'
 
           'கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தை மதிக்காத பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி, விளக்கம் கேட்கப்படும்' என, கல்வித் துறை வட்டாரம், நேற்று தெரிவித்தது.கடந்த, 2006 - 07ல், சட்டம் அமலுக்கு வந்தபோதும், இதை, தனியார் பள்ளிகள், முழுமையாக அமல்படுத்தவில்லை. தி.மு.க., ஆட்சி காலத்திலேயே, பள்ளிகள், சட்டத்தை கண்டுகொள்ளாமல் இருந்தன. இதை, அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.பள்ளி நிர்வாகங்கள், இடங்கள் நிரம்பினால் போதும் என, அலட்சியமாக செயல்பட்டன. தற்போதுள்ள குளறுபடிகளுக்கு, பள்ளி நிர்வாகங்களும், அவற்றை கண்காணிக்காமல், கோட்டை விட்ட அதிகாரிகளும் தான் காரணம்.இந்த விவகாரம் குறித்து, கல்வித்துறை வட்டாரம் நேற்று கூறுகையில், 'சட்டத்தை மீறிய பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி, விளக்கம் கேட்கப்படும். விளக்கத்தின் அடிப்படையில், உரிய நடவடிக்கைஎடுக்கப்படும்' என, தெரிவித்தது.
 
தனியார் பள்ளிகள் விவரம்:

ஆரம்பப் பள்ளிகள்:6,304
நடுநிலைப் பள்ளிகள்:946
உயர்நிலைப் பள்ளிகள்:1,868
மேல்நிலைப் பள்ளிகள்:2,247
மொத்தம்:11,365
 
முடிந்த தேர்வில் 24 ஆயிரம் பேர்!
 
        நடந்து முடிந்த, 10ம் வகுப்பு தேர்வில், 24 ஆயிரம் மாணவர்கள், தமிழ் அல்லாத பிற மொழி பாடத்தை, முதல் பாடமாக எழுதி உள்ளனர்.கடந்த, 23ம் தேதி ?வளியான, 10ம் வகுப்பு தேர்வு முடிவில், பிற மொழிப் பாடத்தை, முதல் பாடமாக எடுத்து, தேர்வெழுதிய மாணவர்கள் எண்ணிக்கை:
இந்தி:9,898
தெலுங்கு:4,554
பிரெஞ்ச்:2,512
மலையாளம்:2,017
உருது:3,479
அரபிக்:714
கன்னடம்:853
சமஸ்கிருதம்:676
குஜராத்தி:6
மொத்தம்: 24,709

'பள்ளி தாளாளர்கள் முதல்வர்களே பொறுப்பு':
 
         மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை, நேற்று, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:தமிழை முதல் பாடமாக கட்டாயம் நடத்த வேண்டும் எனவும், இல்லையெனில், 2016 பொதுத்தேர்வில், பிரச்னை ஏற்படும் எனவும், தனியார் பள்ளி தாளாளர்களுக்கு, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.அதையும் மீறி, பல பள்ளிகள், தமிழ் அல்லாத பிற மொழியை, முதல் பாடமாக நடத்துவது தெரிய வந்துள்ளது. இது, கடுமையான விதி மீறல். அரசின் சட்டத்தை மீறி, பள்ளிகள் செயல்படுவது, அங்கீகார விதிகளை மீறும் செயல்.மேலும், சட்டம் குறித்து அறியாத பெற்றோரையும், மாணவர்களையும் ஏமாற்றும் செயல். சட்டத்தை அறியாமல், 10ம் வகுப்பு வரை, ஒரு குழந்தை, வேறு மொழிப்பாடத்தை படித்து, 2016 பொது தேர்வில், ஏற்கனவே படித்த மொழிப்பாடத்தில் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டால், அதற்கான முழு பொறுப்பும், சம்பந்தப்பட்ட பள்ளி தாளாளரையும், பள்ளி முதல்வரையுமே சாரும்.உடனே, வேறு மொழியை, முதல் பாடமாக கற்பிப்பதை நிறுத்தி விட்டு, தமிழை, முதல் மொழிப்பாடமாக கற்பிக்க வேண்டும். இது குறித்த அறிக்கையை, ஜூன், 10ம் தேதிக்குள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும். மீறும் பள்ளிகளின் அங்கீகாரம், திரும்பப் பெற, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.




1 Comments:

  1. THIS IMPORTANT MESSAGE SHOULD COMPULSORY DISPLAYED IN EVERY SCHOOL VISIBLE TO THE STUDENTS AND PARENTS

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive