NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில் அதிக மாணவர்கள் தோல்வி ஏன்? - ஆய்வுகட்டுரை




பின்னடைவின் பாடம் !
                    
                     இருபத்துமூன்றாம் தேதியின் கனத்த முற்பகல் நிமிடமொன்றில் தலைமையாசிரியர் அந்த அரக்குவண்ண உறையைப் பிரித்தார். சுற்றியிருந்த ஆசிரியர்கள் அத்தனை பேரின் கண்களிலும் ஒரு மிரட்சி. ஓர் எதிர்பார்ப்பு.  

                    உறையின் உள்ளிருந்த பத்தாம் வகுப்புத் தேர்ச்சி விவரத்தைப் பார்வையிட்ட தலைமையாசிரியர்தமிழ்பாடத்துல மட்டும் ரெண்டு பேரு பெயிலு. மத்த பாடத்துல எல்லாரும் பாஸ் “ -இக்காட்சி சற்றேறக்குறைய எல்லாப் பள்ளிகளிலும் பரவலாகக் காணப்பட்டது. பள்ளியின் தேர்ச்சி விழுக்காட்டினை அறிவியல்,கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களே முடிவுசெய்யும் இடத்தில் இருந்த நிலை போய் அவ்விடத்தை தமிழ்ப்பாடம் பிடித்துக் கொண்டதை தற்போதைய தேர்ச்சி முடிவுகள் காட்டுகின்றன. இச்சூழலில் தமிழ்ப்பாடத்தின் பின்னடைவுச் சூழல் பற்றிய புரிதல் அவசியமாகிறது.

                   இப்பின்னடைவு பெற்றோரிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை. அதேநேரத்தில் இப்பாதிப்பு தமிழாசிரியப் பெருமக்களின் மனசாட்சியை சிறிதுகாலமாக உலுக்கிக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.

                   2014 பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வினை 10,28,876 மாணவர்கள் எழுதினார்கள். அவர்களுள் 72722 மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் தோல்வி கண்டுள்ளார்கள் என்ற செய்தி தமிழாசிரியப் பெருமக்களை மட்டுமல்லாது கல்வியாளர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

                  புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்வெழுதிய 23671 மாணவர்களுள் 21417 மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளார்கள். 2254 மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். இவர்களுள் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ்ப்பாடத்தில் தோல்வி கண்டுள்ளார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.. இத் தோல்வி புதுக்கோட்டை மாவட்டத் தமிழாசிரியர்களிடையே பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

                   தாய்மொழிப் பாடத்தில் மாணக்கர்களின் தேர்ச்சி விழுக்காடு குறைந்து போனதற்கு பல காரணங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. இரண்டு தாள்கள், வினாக்கள் அதிகம், மதிப்பெண் பகுப்பில் குறை, மாணவர்களிடையே விழிப்புணர்வின்மை, தமிழாசிரியர்களிடையே ஆர்வமின்மை என்று பல காரணிகள் கூறப்படுகின்றன..
                  ஆயினும் கடினப் பாடமென்று ஆசிரியர்களால் வலியுறுத்தப்படும் கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களிலும் இத்தகு இடர்ப்பாடுகள் காணப்படினும் அப்பாடங்களில் குறிப்பாக கணிதப் பாடத்தில் மாணாக்கர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பது, சில மாற்றங்களுக்கு தமிழாசிரியப் பெருமக்கள் உட்பட்டாக வேண்டுமென்ற உண்மையைக் காட்டுகிறது. அம்மாற்றங்களை நாம் தொடர்ந்து வலியுறுத்துவதும் அவசியமாகிறது.

பள்ளிப்புறச்சூழல் சாதகமின்மை :
                பள்ளிகளில் காலை வழிபாட்டுக் கூட்டம் தொடங்கி, இலக்கிய மன்றங்கள், பொது விழாக்கள் ஒருங்கிணைப்பு ,நூலகச் செயல்பாடு என்று வகுப்பறையையும் தாண்டி வெற்றிச் சூழலை சாதகப்படுத்திவரும் தமிழாசிரியப் பெருமக்களுக்கு தேர்ச்சி விழுக்காட்டினை அதிகரிப்பது என்பது இலகுவான ஒன்றுதான்.   
    
                 ஆனால் பள்ளிப் புறச்சூழல் எப்போதும் தமிழாசிரியப் பெருமக்களுக்கு எதிராகவே அமைந்துள்ளது வருந்தத்தக்க ஒன்று. தமிழ்ப்பாடத்தைக் கேலி செய்வதும், தமிழாசிரியர்களை பணிஅவமதிப்பு செய்வதும் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் உள்ளன. ஒருநாள் என் வகுப்பறையில் அலகிடுதல் பகுதியை நடத்திக்கொண்டிருந்தபொழுது பாடவேளை முடிந்து விட்டது. ஒரு ஐந்து நிமிடம் கூடுதலாக எடுத்து மீதிப் பகுதியை நடத்திக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த கணித ஆசிரியர் ஒரு கேலிப்புன்னகையோடு மாணவர்களையும் என்னையும் பார்த்துச் சிரித்தார். “ ஆமா. இதெல்லாம் போயி நடத்திக்கிட்டு இருக்கீங்கஎன்பதாக அவர் முணுமுணுத்தது என்னை எரிச்சலூட்டியது..

                 வேறொரு பள்ளியில்  பெண் தமிழாசிரியர் படிவம் நிரப்பும் பகுதியை கற்பித்துக் கொண்டிருக்கையில் அங்கு வந்த தலைமையாசிரியர் தவறான தகவலை மாணவருக்குச் சொல்லியதோடு சரியாகக் கற்பித்த அவரை அவமதித்ததாகக் கூறி அழுத நிகழ்வும் என்னை மிகவும் பாதித்தது. இது போன்று பல நிகழ்வுகள் தொடர்ந்து பள்ளிகளில் தமிழ்ப்பாடத்திற்கும்  தமிழாசிரியர்களுக்கும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. பள்ளிகளில் நம்மொழிப்பாடம் முதன்மைப்படுத்தப்படும் வரை நாம் நம் செயல்பாடுகளில் முனைப்பு காட்டியே தீர வேண்டும். தேர்ச்சி விழுக்காடு குறைவதற்கு இதுவும் ஒரு காரணம் என்றே நான் கருதுகிறேன்.

வினாத்தாள் பகுப்பாய்வில் தமிழ்ப்பாடநிலை :
               இத்தருணத்தில் வினாத்தாள் பகுப்பாய்வும் அவசியமாகிறது. தமிழ்ப்பாட வினாத்தாளில் முதல் தாளில் 49 வினாக்களும் இரண்டாம் தாளில் 41 வினாக்களும் கொடுக்கப்படுகின்றன. பிற பாட வினாத்தாளினை நோக்குங்கால், தமிழ்ப்பாட வினாத்தாள் அமைப்பின் கடினம் நமக்குப் புரிகிறது. ஆங்கிலப்பாடத்தில் முதல் தாளில் புறவயவினாக்களும், இலக்கணமும் 45 மதிப்பெண்களைக் கொண்டுள்ளன. ஆனால் தமிழ் முதல் தாளில் புறவயவினாக்கள் 20 மட்டுமே கொடுக்கப்படுகின்றன. உரைநடை, செய்யுள் ஆகிய பகுதிகளுக்கு 35 மதிப்பெண்களும் மொழித்திறன்களுக்கு 20 மதிப்பெண்களும் ஆங்கிலப் பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இது மெல்லக்கற்கும் மாணவர்கள் எளிதில் மதிப்பெண்கள் எடுக்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது,

              ஆனால் தமிழ் முதல் தாளில் எழுதப்படிக்கத் தெரியாத மெல்லக் கற்கும் மாணவர்களுக்குத் தகுந்த வடிவமைப்பு இல்லை என நான் கருதுகிறேன். மொழித்திறன்கள் ( ஒலி வேறுபாடு அறிதல், அகரவரிசையில் எழுதுதல், செய்யுள் அமைப்பு கண்டறிதல், உரையாடல், மொழி விளையாட்டு ) அதிகம் சேர்க்கப்படவேண்டும். 35 வினாக்கள் ஒரு மதிப்பெண் புறவய வினாக்கள் வழங்கப்படவேண்டும். ஆங்கிலம் இரண்டாம் தாளில் துணைப்பாட்த்திற்கு 35 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழ் இரண்டாம் தாளில் வெறும் 5 மதிப்பெண்களே வழங்கப்பட்டுள்ளன. மொழித்தொடர்புறு திறன்கள், சொந்த நடையில் எழுதுதல் போன்றவை ஆங்கிலப் பாட்த்தில் அதிகம் கேட்கப்படுகின்றன. ஆனால் தமிழ் வினாத்தாளில் இவை மிகவும் குறைவு. மொழித்திறன்கள் மேலும் வலுவாகக் கேட்கப்படவேண்டும்.

              செய்யுள் நயம் பாராட்டலுக்கு மேனிலைத் தேர்வில் பத்து மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஆனால் பத்தாம் வகுப்பிலோ ஐந்து மதிப்பெண்களே வழங்கப்படுகின்றன. கடிதங்கள், நிரப்பும் வகை வினாக்களாக ஆங்கிலத்தில் கேட்கப்படுவது போல் தமிழில் இல்லை, படிவங்கள் நிரப்பப்படுவது ஆண்டுக்காண்டு மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது. புறவய வினாக்கள் இன்னும் அதிகப்படுத்த வேண்டும். வாக்கியம் அமைத்தல், பேசுதல், எழுதுதல், போன்ற அடிப்படைத் திறன்களில் போதிய வினாக்கள் வழங்கப்படுவதில்லை.

             மேலும் கணித வினாத்தாளில் 15 புறவயவினாக்களும் வடிவியல், வரைபடம் 20 மதிப்பெண்களும் கேட்கப்படுகின்றன். பெரும்பாலான பள்ளிகளில் கணித ஆசிரியர்கள் இதை மட்டுமே கற்பித்து தேர்ச்சியடைய வைத்து விடுகிறார்கள். அறிவியல் வினாத்தாளில் இருபது மதிப்பெண் எடுத்தால் போதுமானது. 15 புறவய வினாக்களும், 40 மதிப்பெண்கள் கொண்ட குறுவினாக்களும் மாணவர் தேர்ச்சிக்கு எளிமையாகத் துணைநிற்கின்றன.

             சமூக அறிவியலிலோ 24 புறவயவினாக்களும், காலக்கோடு 5 மதிப்பெண்களும், வரைபடம் 15 மதிப்பெண்களும் மாணவர்களுக்கு எளிதில் தேர்ச்சி இலக்கை எட்ட வைக்கின்றன. வரைபடம் சார்ந்த வினாக்கள் அனைத்துப் பாடங்களிலும் கேட்கப்படுகிறது.ஆனால் தமிழ்ப்பாடத்தில் மட்டும் கேட்கப்படுவதில்லை. வரைபடப் பொருளுணர் திறன் பயிற்சிகள், செய்யுளை வரைபடமாக வரைதல் போன்றவையும் சேர்க்கப்படல் காலத்தின் கட்டாயமாகிறது.

            எனவே வினாத்தாள் வடிவமைப்பு பிற பாடங்களைக் காட்டிலும் தமிழ்ப்பாடத்தில் கடினமாக வடிவமைக்கப்படுள்ளது தெரிகிறது, இந்நிலை மாற்றப்படல் அவசியம். இதனைத் தமிழாசிரியப் பெருமக்கள் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

நேரப்பகுப்பாய்வில் தமிழ்ப்பாடநிலை :
            பள்ளிகளில் வாரத்திற்கு 40 பாடவேளைகள் கற்பித்தலுக்காகப் பகுக்கப்பட்டிருக்கின்றன. அதில் தமிழ் 7, ஆங்கிலம் 7, கணிதம் 7, அறிவியல் 7, சமூக அறிவியல் 5 என 33 பாடவேளைகள் பாடங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது போக இரு பாடவேளைகள் உடற்கல்விக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள 5 பாடவேளைகள் மதிப்பீட்டுக் கல்வி 2, ஓவியம் 1, தையல் 1, சுற்றுச்சூழல் கல்வி 1 என ஒதுக்கப்படும்.

              மதிப்பீட்டுக் கல்வி பெரும்பாலும் கணித ஆசிரியர்களின் பாடவேளைகளாகவும் இணைச்செயல்பாட்டுப் பாடவேளைகள் பெரும்பாலும் அறிவியல் ஆசிரியர்களின் பாடவேளைகளாகவும், சுற்றுச்சூழல் ஆங்கில ஆசிரியரின் பாடவேளைகளாகவும் இரகசியமாகப் பாகுபாடு செய்யப்படுகின்றன. 35 மதிப்பெண்கள் தேர்ச்சி பெறக்கூடிய பாடங்களுக்கு 10 பாடவேளைகளும், 70 மதிப்பெண்கள் எடுக்கவேண்டிய தமிழ்மொழிப்பாடத்திற்கு 7 பாடவேளைகளும் ஒதுக்கீடு செய்யப்படுவது எவ்வகையில் சரியென்று தெரியவில்லை.

பள்ளித் தேர்வுச் சூழல் :
                  சிறப்புத் தேர்வுகளிலும் கூட தமிழ்ப்பாடத் தேர்ச்சிப் புள்ளிவிவரங்கள் ஆசிரியர்களால் கவனிக்கப்படுவதில்லை. சிறப்பு வகுப்புகளிலும் தமிழ்ப்பாடத்திற்கு உரிய முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. இப்பாகுபாடு தமிழாசிரியர்களிடையே ஒருவித களைப்பையும் சலிப்பையும் உண்டாக்குகின்றன என்பதே உண்மை.

                  புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களால் தமிழ், ஆங்கிலம்,கணிதம், சமூக அறிவியல் பாடங்களுக்கான சிறப்புக் கட்டகங்கள் வெளியிடப்பட்டன. இக்கட்டகங்கள் பல்வேறு கல்வி நிறுவனங்கள் தரும் அன்புக்கொடை மூலம் வெளியிடப்படுகின்றன. அதிலும் கூட தமிழ்ப்பாடத்திற்கான கட்டகம் வெளியிட பல கல்வி நிறுவனங்கள் தயங்கியதாக வந்த செய்திகள் மிக்க வருத்தத்தை அளித்தன.. வருங்காலங்களில் தேர்வுக் கால அட்டவணையிலும் சரி, சிறப்புத் தேர்வுகளிலும் சரி, தமிழ்ப்பாட்த்திற்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும்.

பொதுத்தேர்வுமதிப்பீடு ;
                   ஆங்கிலப் பாடத்தில் பலர் இவ்வாண்டு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இது ஆங்கில ஆசிரியர்களிடையே கூட வியப்புக்குரிய செய்தியாகப் பேசப்படுகிறது. மொழிப்பாடங்களில் 100 மதிப்பெண் பெறுவது என்பது எவ்வகையில் சாத்தியம் என்பது மதிப்பிடும் ஆசிரியர்களுக்கே வெளிச்சம்.

                தமிழ்ப்பாட மதிப்பீட்டாளர்கள் மொழிப்பாட மதிப்பீட்டின் போது பிழைகளுக்கு மதிப்பெண் குறைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அது தவறில்லை. ஆயினும் வினாவினைப் புரிந்து சொந்தமாக விடை எழுதப்பட்டிருக்கும் வினாத்தாளில் பிழைகளுக்காக மதிப்பெண் முழுமையாகக் குறைக்கப்படுவது மாணவனின் கற்றல் அடைவின் மீதான அவநம்பிக்கையினை அதிகப்படுத்தும் செயல் என்றே நான் கருதுகிறேன்.

              கோனார் உரையில் வெளியிடப்பட்ட கவிதை விடைத்தாளில் இல்லையென்று மதிப்பெண் குறைத்த தமிழாசிரியரைப் பார்த்து நான் மிக்க வேதனையடைந்திருக்கிறேன். சொந்தமாக எழுதப்படும் விடைக்கு மதிப்பெண் குறைக்கும் மதிப்பீட்டாளர்கள், உரையிலோ அல்லது வேறு வகையிலோ மனப்பாடம் செய்து எழுதும் விடைக்கு முழு மதிப்பெண் வழங்குகிறார்கள் என்றால் மதிப்பிடும் திறன் கட்டாயம் மறுஆய்வு செய்யப்படல் அவசியம். பெண் தமிழாசிரியர்கள் மதிப்பீட்டில் சற்று தாராளமாக நடந்து கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் ஊடகங்களால் பேசப்பட்டுகின்றன. ஒருவித பயம் சார்ந்த புறச் சூழல் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.

               இந்நேரத்தில் எழுத்தாளர் செயமோகன் எழுதிய பெண் ஆசிரியர்கள் சார்ந்த கருத்து மெய்யாகிவிடுமோ என்ற அச்சமும் என்னுள் எழுகிறது,
[தமிழகக் கல்வித்துறையில் உள்ள ஆசிரியைகளில் சற்றேனும் பாடம் நடத்துபவர்கள் அரை சதவீதம் இருந்தாலே ஆச்சரியம். திருமணமாகி குழந்தை பெற்றதுமே வேலையை ஒப்பேற்றிவிட்டு வீடுதிரும்புதல், முடிந்தவரை விடுப்பு எடுத்தல்தான் அவர்களின் வழிமுறையாக இருக்கிறது. சமூகம் என்ற ஒன்று இருக்கும் தகவலே அவர்களுக்குத் தெரியாது என்னும்போது என்ன சமூகப்பொறுப்பு? மேலும் அடிப்படை அறவுணர்ச்சி கொண்ட படித்த பெண்கள் இங்கே வைரங்களுக்குச் சமம். எங்காவது தோண்டித்தான் எடுக்கவேண்டும். தனக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் கோயில்சொத்தை கொள்ளையடிக்கவும் தயங்காத குடும்பவிளக்குகளே பெரும்பான்மை. இதை பலநூறு முறை நேரில் கண்டு திகைத்திருக்கிறேன்] - செயமோகன் - கல்விக்களைகள் - 15.05.2014. இதற்கான பதிலை தமிழாசிரியர்கள் தான் தீர்மானிக்கவேண்டும்.

தமிழ்ப்பாடத் தேர்வுத்தாள்கள் ;
                    அரசு தமிழ்ப்பாடத்திற்கு இரு தாள்கள் வைத்திருப்பது தற்போது விவாதப் பொருளாகியிருக்கிறது. மொழித்திறன்களை அளவிட ஒரு தாள் போதுமானதாக இருக்காது என்ற கருத்திற்கு மறுப்பேதுமில்லை,ஆனால் இரு தாள்களின் மதிப்பெண்களையும் கூட்டிச் சராசரி மதிப்பெண் அளவுகோல் பின்பற்றப்படுவது மறுபரிசீலனை செய்யத் தக்க ஒன்று என்றே நான் கருதுகிறேன்.. மொழிப்பாடங்களுக்கு இரு தாள்களை வைக்கும் அரசு ஏன் அவைகளைத் தனித்தனித் தேர்வுகளாக ஏற்க மறுக்கின்றது என்பது தெரியவில்லை ஐந்து பாடங்கள் என்பதை ஏழு பாடங்களாக மாற்றி மொழிப்பாட இரு தாள்களுக்கும் தனித்தனியாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்ச்சி அளவிடப்படவேண்டும். அதற்குக் கூடுதல் தமிழாசிரியர்களை நியமிக்க வேண்டும்.

                 ஏனெனில் 34 மதிப்பெண்களில் தோல்வியடைந்த மாணவர்களின் விழுக்காடு 10 சதவீதம் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இதற்குக் காரணம் இரு தாள்களின் சராசரி மதிப்பெண் கணக்கிடப்படுவதே ஆகும். பல மாணவர்கள் ஏதாவது ஒரு தாளில் தேர்ச்சி அடைந்து மற்றொரு தாளில் தோல்வியடைவது மொழிப்பாடத் தேர்ச்சிவிகிதம் குறைவதற்கான முக்கியக் காரணமாகும்.தேவையேற்படின் மேனிலைக்கல்வியில் இருப்பதைப் போன்று அடிப்படை மொழித்திறன்களில் வாய்மொழித்தேர்வு உருவாக்கப்படலாம்.

பாடப்புத்தகக் குழப்பங்கள் :
                  இதுபோதாதென்று பாடப்புத்தகத்தில் காணப்படும் ஐயங்கள் தமிழாசிரியரின் கற்பித்தல் பாதையில் பெரும் குழப்பத்தினை ஆண்டு தோறும் ஏற்படுத்திவருகின்றன. பாடப் புத்தகத்தில் ஐந்து ஒருமதிப்பெண் வினாக்களுக்குச் துல்லியமான விடை இல்லை. ( .கா : உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் - சீதக்காதியா, அபுல்காசிம் மரைக்காயரா போன்றவை ) மேலும் பல வினாக்களுக்கான விடைகள் குழப்பமாக உள்ளன. அது கட்டாயம் வருங்காலங்களில் தீர்க்கப்படவேண்டும்.
 


மாணாக்கரின் தமிழ்ச்சூழல் :              
                மாணவர்களிடையே தமிழ் மொழி மீது பற்றற்ற சூழலே தொடர்ந்து நிலவி வருகிறது. கவிஞர் முத்து நிலவன் கூறியதைப் போல தமிழ்ப்பாடத்தின்  இன்றைய நிலை மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது.

    ( தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களில் எடுக்கும் மதிப்பெண்  அதற்குமேல் போகும் தொழிற்கல்வி வகுப்புகளுக்கு -எந்தப் பயனையும் தரப் போவதில்லை. கணக்கில் கொள்ளப்படுவதும் இல்லை. கட்-ஆஃப்எனும் உயர்கல்விக்கான அடிப்படை-மதிப்பெண் தகுதி தமிழுக்கில்லை. இயற்பியல், வேதியியல், உயிரியல் மதிப்பெண்கள் மட்டுமே மருத்துவக் கல்விக்கும், இயற்பியல், வேதியியல், கணித மதிப்பெண்கள் மட்டுமே பொறியியற் கல்விக்கும் கணக்கில் கொள்ளப்படும் நடைமுறையை நமது அரசுகள் கொண்டுள்ளன. பிறகு தமிழ் எதற்கு? சும்மா தேர்ச்சிபெற்றால் போதுமல்லவா? “தமிழைப் படிச்சு டைமை வேஸ்ட் பண்ணாதே!எனும் குரல்கள் தமிழே வேஸ்ட்எனும் மனநிலைக்கு மாணவரைத் தள்ளாதா?  - கவிஞர் முத்துநிலவன் - பத்தாம் வகுப்பில், தமிழ்ப் பாடத்தில் அதிகத் தோல்விக்குக் காரணமென்ன? - 26.05.2014.)

 

                        தமிழாசிரியர்கள் தம்மைச் சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டிய தருணம் இது. பள்ளிகளில் பணிநிரவல் எனும் பெயரால் பணியிடங்கள் குறைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆங்கிலவழிப் பயிற்றுமுறை தீவீரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில்  தமிழ்ப்பாடத் தேர்ச்சி விழுக்காடும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை என்றால் தமிழ்ப்பாடத்தை பள்ளிகளிலிருந்தே எடுக்கப்படும் அவலநிலை ஏற்பட்டாலும் வியப்பில்லை. தமிழாசிரியர் பணியிடங்கள் படிப்படியாகக் குறைக்கப்படும் அபாயம் ஏற்படும்.

 

                        இப்பின்னடைவு தற்காலிகமானதுதான். ஆங்காங்கே ஆசிரியர்களுடனும் ஆய்வு அலுவலர்களுடனும் நம் பாடத்தின் மேன்மை குறித்தும் மாற்றம் குறித்தும் விவாதித்து நல்லதொரு முடிவை எட்டுவோம். நாம் நமக்காய் மட்டுமல்ல ; .நம் உயிர்மொழித் தமிழையும் காப்பதற்காய் விழித்துக்கொள்வோம்..

           ஓங்கல் இடைவந்(து) உயர்ந்தோர் தொழவிளங்கி
             ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் - ஆங்கவற்றுள்
             மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
             தன்னே ரிலாத தமிழ்.
-    தண்டியலங்காரம்.

   சி.குருநாதசுந்தரம்,
மாவட்டச் செயலர்,
தமிழகத் தமிழாசிரியர் கழகம்,
புதுக்கோட்டை மாவட்டம்.
gurunathans.blogspot.in

நன்றி :







16 Comments:

  1. நல்ல கட்டுரை.கூறப்பட்டிருப்பது.அனைத்தும் உண்மை.ஜெயமோகனின் பெண் ஆசிரியர்களைப்பற்றிய கருத்துத்தை வன்மையாக கண்டிக்கிறேன்

    ReplyDelete
  2. nalla katturai, onbatham vaguppula sariyanavagalukku mattum therchi aliththal entha
    nelai varathu. RMSA karanam katti anaivariyum (pallike varathavargalayum) adutha
    vaguppukku matruvathu entha vagail sari.(sory)

    ReplyDelete
  3. என்ன கொடுமை சார் இது.

    ReplyDelete
  4. பவானி5/29/2014 8:17 pm

    தமிழ் நாட்டில் பிறந்து, பத்து வருடங்கள் தமிழைப் படித்து, தமிழ் பாடத்தில் தோல்வியடைவதற்கு தமிழாசிரியர்கள் வெட்கப்பட வேண்டும்.

    தமிழ் முதல் தாளில் 20 ஒரு மதிப்பெண் புறவய வினாக்கள். 4, 6, 9, 10 ஆகிய பாடங்களிலிருந்து மட்டுமே கேட்கப்படும் 45 ஆவது வினாவிற்கு 5 மதிப்பெண்கள். முதல் 5 பாடங்களில் உள்ள புத்தக வினாக்களை மட்டுமே படித்தால் குறைந்தது நான்கு 2 மதிப்பெண் வினாக்களும், இரண்டு 4 மதிப்பெண் வினாக்களும், 5 மதிப்பெண்களுக்கு மனப்பாட வினாக்களும், 8 மதிபெண் கொண்ட ஒரு நெடு வினாவையும் எழுதி தோராயமாக (குறைந்தது) 40 மதிப்பெண் பெற்று விடலாம்.

    தமிழ் இரண்டாம் தாளில் எளிமையான 10 ஒரு மதிப்பெண் புறவய வினாக்கள். வினா எண் 31 லிருந்து 36 வரையிலுள்ள வினாக்களுக்கு [துணைப்பாடக் கட்டுரை, ஆங்கிலச் சொல்லை நீக்கி எழுதுதல், தமிழெண்களை எழுதுதல், தமிழாக்கம் செய்தல், தலைப்பு எழுதுதல், கவிதை எழுதுதல்] மாணவரைத் தயார் செய்தால் குறைந்தது 20 மதிப்பெண் பெறலாம். படிவம் நிரப்புதல், வாழ்வியல் சூழலப் படித்து விடையளித்தல், விண்ணப்பம், பொதுக்கட்டுரை எழுதுதலில் குறைந்தது 20 மதிப்பெண் பெறலாம். ஆக மொத்தம் தோராயமாக (குறைந்தது) 40 மதிப்பெண் பெற்று விடலாம்.

    என்வே தமிழில் 40 மதிப்பெண் பெற்று மிக எளிமையாக தேர்ச்சி பெற்றுவிடலாம். தமிழாசிரியர்கள் குறைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு, மற்ற பாட ஆசிரியர்களை நொந்துகொள்வதை என்னெவென்று சொல்ல...!?!?!?

    ReplyDelete
    Replies
    1. பத்தாம் வகுப்பு வரை தமிழைக்கூட சரியாக படிக்கத் தெரியாமல் வருவதும்,தழிழ் படிக்கத் தெரியாதவன் கூட அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறுவதும் நடக்கிறதே?இதற்கு யாரைக் குறை சொல்வது?

      Delete
  5. Thangalin karuthukal unmaithan. Thmizhl thane yendu ellorum vilayatta padithathal intha nilai. BHAVANI avarkal solvathu pol matra padangali pass enpathu kavanikapada vendiayathuthane. Intha tholvi anaithu aasiriyarkalukkum avamanamthan. Varunkalangali ithai sari seiya villai yenil matra padankalilum idhu thodarum enpathil iyyamillai.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. பள்ளிகளில் சில தலைமை ஆசிரியர்கள் மற்ற ஆசிரியர்களோடு
    சேர்ந்து பார்ட்டி என்ற பெயரில் மாமிச உணவுவகைகளை
    பள்ளியிலேயே உண்கிறார்கள். அது மட்டுமல்ல அதோடு கூட
    மது பாட்டில்களையும் வாங்கிவந்து கதவை சாத்திவிட்டு
    பள்ளியிலேயே அருந்துகிறார்கள். பள்ளிகளில் மாணவர்களை
    திருத்தவேண்டிய தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களும் இப்படி
    செய்தால் மாணவர்களுக்கு நல்வழி காட்டுவது யார்? பள்ளியிலேயே
    மது அருந்துவது மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவது என்று
    தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களும் இருந்தால் பள்ளி எப்படி
    உருப்படும். மாணவர்கள் எப்படி ஆசிரியர்களை மதிப்பார்கள்?
    எனவே, உயர்அதிகாரிகள் இப்படிபட்ட தலைமை ஆசிரியர்களுக்கு
    ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை அளிப்போடு உடனடியாக திருந்தும்
    வகையில் கடுமையான தண்டணைகள் வழங்கினால் பள்ளியின்
    தரம் உயர்வதோடு தேர்ச்சிவிழுக்காடும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. Unga palliyil nadapathu Ella idathilum nadakathuu.ellaraium kurai solla kudathu

      Delete
  8. lady teacher s weast school ku lateda varadhum bell atidhall baiyanukalodu sernthu oodu vadhum vetgakedana visayam lady teacher concham thirunthugal please................

    ReplyDelete

  9. தமிழ்ப்பாட தேர்ச்சி ஆய்வுகட்டுரையில் ulla karuthukkal anaithum 100 சதவீதம் unmai

    ReplyDelete
    Replies
    1. Enna unmai therilanga.ethanai Tamil class control irukkunga.

      Delete
  10. Matha pada asiriyarai kurai kurum Tamil asiriyar ethanaiper PALAYA ayyakkalai. Ponru ullana.maths teacher can teach Tamil. They can try geometry graph for one year

    ReplyDelete
  11. Tamil thappu thappa eluthum Tamil teachers irukkum varai ippadithanga.kurai solliye palakkapatta vanga.

    ReplyDelete
  12. Nalla katturai ethana Tamil teacherukku office work kuda padam nadatharanga.Ella velaium seithu June muthal paritchai varai mundiyaddukkum maths teachers kurai solla

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive