NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி மாணவர்களுக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா?

            அரசு பஸ்களில் அளவுக்கு அதிகமான மாணவ, மாணவிகள் ஆபத்தான நிலையில் பயணம் செய்வதை தவிர்க்கவும், ஓடும் பஸ்சில் மாணவர்கள் ஓடிச் சென்று ஏறி விபத்தில் சிக்குவதை தவிர்த்திட, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

              தமிழகத்தை முழு கல்வி அறிவு பெற்ற மாநிலமாக மாற்ற அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொருளாதார நிலைக் காரணமாக கிராமப்புற மாணவர்கள் கல்வி இடைநிற்றலை தவிர்க்க, மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கி வருகிறது.

மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு இலவச பஸ் பாஸ் வழங்கிய போதிலும், அதனை வைத்துள்ள மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவும், மாலை பள்ளி விட்டதும் வீடு திரும்பவும் பஸ்சை பிடிக்க பெரும் போராட்டமே நடத்த வேண்டியுள்ளது.

காரணம் காலை நேரத்தில் கிராமங்களில் இருந்து அலுவலகம் மற்றும் இதர பணிகளுக்கு வருவோர் அதிகமாக உள்ளதாலும், மாலையில் நகரங்களில் பணிகளை முடித்துக் கொண்டு கிராமத்திற்கு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாலும், பஸ்கள் புறப்படும் இடங்களிலேயே பயணிகள் கூட்டம் நிரம்பி விடுவதால் அடுத்துள்ள ஓரிரு நிறுத்தங்களில் உள்ள மாணவர்கள் மட்டுமே பஸ்களில் ஏற முடிகிறது.

அளவுக்கு அதிகமான கூட்டம் இருப்பதால் டிரைவர்கள் அடுத்தடுத்த நிறுத்தங்களில் பஸ்களை உரிய இடத்தில் நிறுத்துவதற்கு முன்பாகவோ அல்லது நிறுத்தத்தை தாண்டிச் சென்று நிறுத்துகின்றனர். பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவர்கள் புத்தகப்பை சுமையுடன் ஓடிச் சென்று பஸ்சில் ஏற வேண்டியுள்ளது.

அவர்களில் ஒரு சிலர் மட்டுமே பஸ்சில் ஏறுகின்றனர். அவர்களும் படிக்கட்டில் தொங்கியபடியே பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் பஸ்களை பிடிக்க முடியாமல், உரிய நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

இதுகுறித்து அரசு பஸ் டிரைவர்கள் கூறுகையில், "அலுவலக நேரங்களில் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் பள்ளி மாணவர்களும் அதிக அளவில் ஏறுகின்றனர். பஸ்சில் குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே பயணிகளை ஏற்ற முடிகிறது. அதற்கு மேல் பயணிகளை ஏற்றினால் பஸ்களை இயக்குவது கடினமாக இருக்கும். பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தால் பயணிகளின் பாதுகாப்பு கருதியே நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்தாமல் சற்று தூரம் தள்ளி நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டுச் செல்கிறோம்.

அப்படியிருந்தும் சில மாணவர்கள் ஓடி வந்து ஏறுகின்றனர். இதுபோன்ற நேரங்களில்தான் விபத்து ஏற்படுகிறது. இதனை தவிர்க்க காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு என தனியாக பஸ்களை இயக்கினால், நாங்களும் உரிய நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்தி அனைத்து மாணவர்களையும் ஏற்றிச் செல்ல வசதியாக இருக்கும். அது எங்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். மாணவர்களுக்கும் சிரமமின்றி இருக்கும்" என்கின்றனர்.

மாணவர்களுக்கென தனி பஸ் இயக்குவது என்பது அரசின் கொள்கை முடிவு. அதுவரை, பஸ்களை பஸ் நிறுத்தங்களில் நிறுத்தி பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்ல போக்குவரத்து கழக அதிகாரிகளும், போலீசாரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பள்ளி நேரங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க, முக்கிய வழித்தடங்களில் கூடுதலாக பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive