Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சென்னையில் 3 மாணவர்களுக்கு அறிகுறி: பன்றிக்காய்ச்சலை தடுக்க 50ஆயிரம் தடுப்பு ஊசி

       நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியா முழுவதும் இந்நோய்க்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கிறார்கள்.

    குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

தமிழகத்திலும் இந்த நோய்க்கு 12 பேர் வரை பலியாகி உள்ளனர். 300 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 150 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.
பக்கத்து மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சல் நோயின் பாதிப்பு தமிழகத்தை விட கொஞ்சம் அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் எல்லையோர பகுதிகளில் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சென்னையில் உள்ள பள்ளிக்கூடங்களில் காலை நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு பன்றிக்காய்ச்சல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

லேசான காய்ச்சல் ஏற்பட்டாலே பள்ளிக்கு வரக்கூடாது என்றும், விடுமுறை எடுத்துவிட்டு வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மாணவ, மாணவிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வு நடைபெறும் நேரங்களில் மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டாலும் கட்டாயப்படுத்தி அவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

காய்ச்சலால் தேர்வு எழுத முடியாமல் போகும் மாணவர்களுக்கு வேறு நாளில் தனியாக தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது 3 மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம், மாணவர்களின் பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்களை அனுப்பியுள்ளனர்.

அதில், மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறி இருப்பதால் உங்கள் குழந்தைகளை சில நாட்கள் பள்ளிக்கு அனுப்புவதும், அனுப்பாததும் உங்கள் விருப்பம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் வேளச்சேரியில் உள்ள அந்த பள்ளிக்கு இன்று குறைவான மாணவர்களே வந்திருந்தனர். பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை.

இதற்கிடையே சூளைமேடு பஜனை கோவில் தெரு ஆனந்த் அடுக்குமாடி குடியிருப்பில் பன்றிக்காய்ச்சல் தாக்கிய கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவர் ஆயிரம் விளக்கில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு குணம் அடைந்தார்.

இதையடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் மற்றவர்கள் பீதியில் தடுப்பூசி போட்டதாக தெரிவித்தனர்.

பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:–

பன்றிக்காய்ச்சல் நோய் வெளி மாநிலங்களில் இருந்து தான் தமிழ்நாட்டுக்கு வந்தது. தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பால் நோய் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக ஆந்திரா, கர்நாடகா, மாநில எல்லைகளில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு காய்ச்சலுடன் யாராவது வருவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க தயார் நிலையில் மருத்துவக்குழு உள்ளது.

பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி அனைவரும் போட வேண்டிய அவசியம் இல்லை. நோய் வந்தவர்களுடன் நெருங்கி பழகுபவர்கள், டாக்டர்கள், நர்சுகள்தான் முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் வராமல் இருக்க 20 ஆயிரம் தடுப்பூசி மருந்து கையிருப்பு உள்ளது. தற்போது மேலும் 30 ஆயிரம் தடுப்பூசி மருந்து வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

இதே போல் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பயன்படுத்தப்படும் ‘டேமிபுளு’ மாத்திரை 4 லட்சம் ஸ்டாக் உள்ளது. அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் மருந்துகள் தயார் நிலையில் உள்ளது.

இப்போது தனியார் ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களுக்கும் ‘டேமி புளு’ மாத்திரையை இலவசமாக வழங்க உத்தரவிட்டுள்ளோம். எனவே மக்கள் பீதியடைய தேவையில்லை.

இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive