NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"ஒரு துவக்கப்பள்ளியின் முடிவு'

           1990 காலகட்டங்களில் உலக வங்கியின் நிர்பந்தத்தால் புதிய பொருளாதாரக் கொள்கையை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தியதால், கல்வியில் தனியார்மயம் அனுமதிக்கப்பட்டு பின்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதன்விளைவு, தனியார் முதலாளிகளும், நிறுவனங்களும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பள்ளி, கல்லூரிகளைத் துவங்கினர்.

           குழந்தைகளின் கூச்சல்களும், ஆரவாரமும் கேட்டுக்கொண்டிருந்த ராமகோவிந்தன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சத்தமில்லாமல் ஒரு நாள் மயானமாகிவிட்டது. ஆம், 52 ஆண்டுகளாக நாகை மாவட் டம் வேதாரண்யம் தகட்டூர் அருகிலிலுள்ள ராமகோவிந்தன்காட்டில் செயல்பட்டு வந்த இப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்றனர். 5 ஆசிரியர்களும் பணியாற்றி வந்தனர். இப்பள்ளி ஏராளமான அறிஞர்களையும், பல்துறை வல்லுநர்களையும் உருவாக்கிய புகழைகொண்டது. கடந்த காலத்தில் அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சலுகைகளும் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட் டுள்ளன. ஆனாலும் ஆண்டுக்காண்டு மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டு வந்துள்ளது. மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களும் வேறு பள்ளிக்கு இட மாற்றப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த கல்வியாண்டில் ஒரு மாணவர் கூட ஒன்றாம் வகுப்பில் சேரவில்லை. 5ம் வகுப்பில் 3 மாணவர்களும், 2ம் வகுப்பில் ஒரு மாணவரும் மட்டுமே படித்து வந்தனர். இதில் ஐந்தாம் வகுப்பில் படித்த மூன்று மாணவரும் தேர்ச்சி பெற்று ஆறாம் வகுப்பிற்கு சென்றனர். இரண்டாம் வகுப்பில் படித்து வந்த முருகபூபதி தேர்ச்சி பெற்று மூன்றாம் வகுப்பிற்கு சென் றார். கடைசியாக, இரண்டு ஆசிரியர்களும் சேர்ந்து 1 மாணவரான முருகபூபதிக்கு வகுப்பெடுத்து வந்தனர். அதற்கும் விரைவில் ஆபத்து வந்தது. இப்பள்ளியில் தனியாக தன் குழந்தை பயில்வதை விரும் பாத பெற்றோர் முருகபூபதியை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டனர்.

இதனால் மாணவர்களே இல்லாத பள்ளியாக மாறியது. இப்பள்ளியை ஆய்வு செய்த அதிகாரிகள், இரு ஆசிரியர்களையும் வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டு அப்பள்ளிக்கு மூடுவிழா நடத்தினர். இதுவரை குழந்தைகளின் இடை விடாத இரைச்சலைக் கேட்டுக் கொண்டிருந்த வகுப்பறைகளும் ஓடி விளை யாடிய பள்ளி வளாகமும் மயான அமைதி யாகிவிட்டது. நாகை மாவட்டத்திலுள்ள ஒரு ராம கோவிந்தன்காடு பள்ளி மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 1100 அரசு பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும்5,7,10,20 என மிகக்குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்டுள்ள 2000 த்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் விரைவில் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.

அரசு பள்ளிகள் மூடப்படுவதற்கு யார் காரணம்?
நாடு விடுதலையடைந்த பிறகு கல்வியை பரவலாக்கும் நோக்கில் பட்டி தொட்டியெங்கும் அரசுப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. சமூக நோக்கில் சில தனியார் பள்ளிகளும் அரசின் மானியம் பெற்று இயங்கின. ஆங்கில ஆட்சிக் காலத்திலேயே உள்ளாட்சி அமைப்புகளின் கீழும், மாவட்டக் கழக சட்டம் 1920 ன் படியும் (னுஐளுகூசுஐஊகூ க்ஷடீஹசுனுளு) மாவட்டக் கழகத்தின் கீழும் இயங்கிய பள்ளிகள் அனைத்தும் 1970ல் அரசு கல்வித்துறையின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. மெட்ரிக் பள்ளிகள் மட்டும் பல் கலைக்கழக பொறுப்பில் இருந்தன.

அவற்றிற்கான விதிகள் மாநில வாரியப் பள்ளிகளுக்கு விதிக்கப்பட்டதை விட மிகக் கடுமையானவையாக இருந்தன. ஆங்கில வழி கட்டணப் பள்ளிகளாக மேட்டுக்குடி மக்களுக்கு பயன்படுவை யாக அவை விளங்கின. 1976ம் ஆண்டில் பல்கலைக்கழகம் பள்ளிக்கல்வி அளிக்கும் பொறுப்பிலிருந்து விலக முடிவெடுத்தது.1978ம் ஆண்டிற்குப் பின்னர் மெட்ரிக் தேர்வுகளை நடத்த மாட்டோம் என அறி வித்தது. மாநில அல்லது நடுவண் வாரியத்தோடு இணைத்துக் கொள்ள மெட்ரிக் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அப்பள்ளிகளுக்கு தனிவாரியம் அமைத்ததும் வாரியத்தின் விதிமுறை களை அப்பள்ளிகளே உருவாக்க அனுமதித்ததும் பல்கலைக்கழக விதிமுறை களை நீர்த்துப் போகச் செய்து விதிகள் உருவாக்கிய போது அவற்றை அப் படியே அங்கீகரித்ததும் அரசு செய்த மாபெரும் தவறுகள்.

அதன் விளைவு 34 மெட்ரிக் பள்ளிகளில் 1 சதவீதத்திற்கு குறைவாகவே பயின்ற மாணவர்கள் என்ற நிலை மாறி இன்று 4000த்திற்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சுயநிதி தனியார் பள்ளிகள் என 11,462 பள்ளிகளாக பல்கிப் பெருகியுள்ளன; இப்பள்ளி களில் மட்டும் தற்போது 45,96,909 மாண வர்கள் பயின்று வருகின்றனர்.

சிவப்புக் கம்பளம் விரித்த ஆட்சியாளர்கள்
1990 காலகட்டங்களில் உலக வங்கி யின் நிர்பந்தத்தால் புதிய பொருளாதாரக் கொள்கையை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தியதால், கல்வியில் தனியார் மயம் அனுமதிக்கப்பட்டு பின்பு தீவிரப் படுத்தப்பட்டது. இதன்விளைவு, தனியார் முதலாளிகளும், நிறுவனங்களும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பள்ளி, கல்லூரிகளைத் துவங்கினர். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தி லிருந்த திமுக, அதிமுக அரசுகள் மத்திய அரசு கொண்டு வந்த முதலாளி களுக்குச் சாதகமான பொருளாதாரக் கொள்கைக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றதோடு அக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதால் சமத்துவ மில்லாத, ஏற்றத்தாழ்வு மிக்கபாகுபடுத்தும் இன்றைய கல்வி அமைப் பாகவும் பல்வகை பள்ளி அமைப்பாகவும் வளர்ந் துள்ளது.

மறுபுறம் அரசுப் பள்ளிகள் மற்றும்அரசு உதவிபெறும் பள்ளிகளை தனிக் கவனத்தோடு, கூடுதல் நிதி ஒதுக்கீடு களை செய்து, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன.

பொதுக்கல்வி நிதி 16 சதவீதம் குறைப்பு
தற்போது மத்தியில் இருக்கும் மோடி தலைமை யிலான பாஜக அரசு, கல்வி வணிகமயத்தை தீவிரப்படுத்தும் விதமாக உள் நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளை கல்வித் துறை யில் தங்கு தடையில்லாமல் அனுமதித்துள்ளது. மறு புறம் பட்ஜெட்டில் பொதுக்கல்விக் கான நிதியை கடந்தாண்டை விட 16 சதவீதம் குறைத்துள்ளது. மேலும் பாடத் திட்டத்தில் மதவெறிக் கருத்துகளை திணித்து தேசத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் வேலையையும் செய்து வருகிறது.

நிரப்பப்படாத ஆசிரியர் பணியிடங்கள், வகுப்பறைகள், கழிப்பறை கள், ஆய்வகங்கள், குடிநீர் போன்ற அடிப் படைத் தேவைகள் போதுமானவையாக இல்லை. படிப்படியாக கல்விக்கான நிதியைக் குறைத்துவிட்டு, கல்வி அளிப்பது பெற்றோர்களின் கடமையாக மாற்றிவிட்டார்கள்.


36,959 அரசுப்பள்ளிகளில் 56,55,628 மாணவர்களும் 8407 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 31,12,603 என்ற எண்ணிக்கையில்தான் மாணவர்கள் பயின்று வருகின்றனர். மூடப்பட்ட அரசுப் பள்ளிகளை திறந்து மீண்டும் செயல்படுத்திடவும், குறைந்த மாணவர் எண்ணிக்கையோடு மூடப்படும் நிலையிலுள்ள பள்ளிகளை தனிக் கவனம் செலுத்தி அப்பள்ளிகளை மேம்படுத்துவதோடு மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சிக்கான உண்மைக் காரணங்களை ஆய்வு செய்து தரமான பள்ளிக் கல்வியை அரசுப் பள்ளிகளில் உறுதி செய்திட வேண்டும் எனவும் இந்திய மாணவர் சங்கம் போராடி வருகின்றது.

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் 11 ஆயிரத்திற்கும் மேற் பட்ட பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர். இந்நிலையை மாற்றி வகுப்பிற்கொரு ஆசிரியர், பாடத்திற்கொரு ஆசிரியர் என்பதை உறுதிப்படுத்திட வேண்டும்.

போதுமான வகுப்பறை, கட்டிடங்கள், ஆய் வகங்கள், குடிநீர், கழிவறைகள், நூலகம், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும்.
ஆங்கில வழிக்கல்வி என்பதை மாற்றி தாய்மொழி வழிக் கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்.
ஆங்கில மொழியை சிறப்போடு கற்பிக்கும் வகையில் பேசவும், எழுதவும் திறன் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு கற்பிக்க வேண்டும். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மொழி ஆய்வகத்தை உருவாக்கிட வேண்டும்.
அரசின் கல்வி உதவித்தொகை உட்பட 14 வகையான நலத்திட்டங்களையும் கல்வியாண்டின் துவக்கத்திலேயே வழங்கிட வேண்டும்.

முழுமையான சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும்.
சமச்சீர் கல்விச்சட்டத்தின்படி நான்கு கல்வி வாரியங்களையும் கலைத்துவிட்டு அதிகாரமுள்ள பொதுப்பள்ளி கல்வி வாரியத்தை உருவாக்கிட வேண்டும்.

கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டின் படி மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும்.
மழலையர் பள்ளிக்கூடங்களை அரசே உருவாக்கிட வேண்டும்

அரசுப் பள்ளிகளே மக்களின் பள்ளிகள்
இன்றைக்கு கல்வி என்ற பெயரில் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளை ஒப்பிடும் போது எல்லா வகையிலும் சிறந்த பள்ளிகள் அரசுப் பள்ளிகளே!காற்றோட்டமான இடம், வளாகம், கட்டிடம், வகுப்பறைகள், ஆய்வகங்கள், தகுதியான, திறமையான ஆசிரியர்கள், அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் பெறும் தகுதி என்ற சிறப்புகளோடு திறமையான வல்லுநர்களையும், அறிஞர் களையும் தேசத்தின் தலைவர்களையும் உருவாக்கிய பள்ளிகள் அரசுப் பள்ளிகளே.

அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியும் தனியார் பள்ளிகளின் அசுர வளர்ச்சியும், உழைக்கும் மக்களுக்கு எதிரானது. உலக அரங்கில் பொதுப் பள்ளிகளின் வரலாற்றுச் சிறப்பை மறந்துவிட முடியாது. ஐரோப்பிய நாடுகள், ஸ்காண்டிநேவிய நாடுகள், கனடா, ஜப்பான், மலேசியா, கியூபா, தென்கொரியா, அமெரிக்கா என உலகின் பெரும்பான்மையான நாடுகளில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் என பொதுப்பள்ளி கல்விமுறை மூலம் தான் இன்று நாம் காணும் உலகின் சமூக வளர்ச்சியை அடைந்துள்ளோம்.

ஆகவே அரசுப் பள்ளிகளை பலப்படுத்துவதும் பாதுகாப்பதுமே பொதுப்பள்ளி முறையை நோக்கி பயணிக்க வழிகாட்டும்.இந்த நோக்கத்தோடு, `தேடு கல்வியில்லா ஊரை தீயினுக்கு இரை யாக்குவோம்’ என்று ஓங்கி முழங்கிய பாரதி யின் வாரிசுகளாக இந்திய மாணவர் சங்கம் கல்வியை, தேசத்தைக் காக்க மாபெரும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை 2015 மே 1 முதல் 30 வரை நடத்துகிறது.
கட்டுரையாளர் : இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர்




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive