புதுடில்லி:கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், வீட்டில் குழந்தைகள் படிக்க வைப்பது தொடர்பாக பெற்றோருக்கான வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:கொரோனா பரவலால் நாடு முழுதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு ஆன்லைன் வழியாக பள்ளி ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர். ஆன்லைனில் குழந்தைகள் பாடம் கற்பது எளிது இல்லை. அவர்களை வீட்டில் படிக்க வைப்பதில் பெற்றோருக்கு பெரும் பங்கு உள்ளது

.அதனால் வீட்டில் குழந்தைகளை படிக்க வைக்க பெற்றோருக்கான வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.புதிய தேசிய கல்விக் கொள்கையை அடிப்படையாக வைத்து, இந்த வழிகாட்டுல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 4 - 8 வயதுடைய குழந்தைகள், 8 - 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 11 - 14 வயதுக்குட்பட்டவர்கள், 14 - 18 வயதுக்குட்பட்டவர்கள் என நான்கு பிரிவுகளில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆன்லைனில் குழந்தைகள் படிப்பதை கண்காணிப்பது மட்டும் பெற்றோர் பணியில்லை. அவர்களின் சந்தேகங்களை போக்க வேண்டும். குழந்தைகளை ஆர்வத்துடன் படிக்க வைத்து, அவர்களின் பொது அறிவை மேம்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பதில் பெற்றோர்களையும் பள்ளிகள் ஈடுபடுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.