நாடு முழுதும் ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ், ரயில்வே, தபால், சுங்கத்துறை, பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட, மத்திய அரசு பணிகளில் வேலை வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
மோடி துவக்கி வைத்தார்
இதற்கிடையே, 15வது ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ், மத்திய அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட, 51,000க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமனங்கள் வழங்கும் நிகழ்வை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
இதேபோல, தேர்வு செய்தவர்களுக்கு, பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சிகள், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் நேற்று நடந்தன. இதில், மத்திய அமைச்சர்கள், மத்திய அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்று, அந்தந்த மண்டலங்களில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆனைகளை வழங்கினர்.
அதன்படி, சென்னை ஆர்.ஏ.புரத்தில் நேற்று நடந்த நிகழ்வில், மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை இணை அமைச்சர் துர்காதாஸ் உய்கே பங்கேற்று, 268 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பின்னர், அவர் பேசியதாவது:
மத்திய அரசு பணிகளில் அனைவரும் பயன் பெறும் வகையில், 13 மொழிகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ், பிரதமர் மோடியின் இரண்டாவது பதவி காலத்தில், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுஉள்ளன.
விழிப்புணர்வு
தற்போது, மூன்றாவது பதவிக்காலத்தில், மேலும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்.
புதிய தொழில் துவங்குவோருக்கு, மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் வாயிலாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தேசத்தின் வளர்ச்சியில், இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது. 2047ல், இந்தியா வல்லரசு நாடாக மாறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஜி.எஸ்.டி., வரி முதன்மை தலைமை ஆணையர் ராம் நிவாஸ் பேசுகையில், தமிழக இளைஞர்களுக்கு, தனியார் துறை வேலையில் ஆர்வம் அதிகம் இருப்பதாக தெரிகிறது.
தனியார் துறை பணிகளை விட, மத்திய அரசு பணிகள் எந்த வகையிலும் குறைவானது அல்ல என்பது குறித்து, இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றார்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...