சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பள்ளி இடைநிற்றல் குறித்து பதிலுரை அளித்தார்.
இந்த அரசு பொறுப்பேற்ற பின், தனியார் பள்ளிகளில் கட்டணத்திற்காக, தனியாக ஒரு கமிட்டி அமைத்துள்ளோம். அதன்படி, நிர்ணயம் செய்யும் கட்டணத்தைத் தாண்டி, யாரும் அதிகமாக வசூல் செய்யக்கூடாது என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது.
அரசு பள்ளிகளில், 1.18 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்து இருக்கின்றனர். வாழ்வாதாரம் பாதிக்கப்படும்போது, ஒட்டுமொத்தமாக அனைவரும் பிள்ளைகளை, அரசு பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
பின்னர், வாழ்வாதாரம் சீரடையும் போது, எப்படியாவது கடனை வாங்கி, தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆசைப்படுகின்றனர்.
தற்போது, ஸ்மார்ட் போன் களுக்கு, 54 சதவீத பிள்ளைகள் அடிமையாகி உள்ளதாக, ஆய்வு தகவல் சொல்கிறது. இது கொரோனா காலத்தில் இருந்துதான் துவங்கியது. நாம் எப்போது, ஆன்லைன் வாயிலாக பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தோமோ, அப்போதில் இருந்தே இந்த அடிமை பழக்கம் துவங்கி விட்டது. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களிடம் இருந்துதான், இந்த பழக்கம் துவங்குகிறது.
ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சமூக வலைதளம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இங்கு தடை செய்வதை, மாநிலம் சார்ந்து முடிவு எடுக்க முடியாது; நாடு சார்ந்து எடுக்க வேண்டி முடிவு. இருப்பினும், அதை நாங்கள் உற்று நோக்குவோம்.
பள்ளிகளில் மாணவர் படிப்பை பாதியில் கைவிடும் இடைநிற்றலை பொறுத்தவரை, 16 சதவீதமாக உள்ளது. இதை ஐந்து சதவீதத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று, முதல்வர் சொல்லி இருக்கிறார்.
ஆரம்பப்பள்ளிகளை பொறுத்தவரை, இடைநிற்றலே இல்லாத மாநிலம் தமிழகம் என, மத்திய அரசு நம்மை பாராட்டுகிறது. மேல்நிலைப்பள்ளியை பொறுத்தவரை இடைநிற்றல், 7.7 சதவீதமாக உள்ளது. அதை சிறிது சிறிதாக குறைத்து விடுவோம்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...