மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 'ஆர்ட் வரைபட வண்ணத் தாள்களை விற்பனை செய்வதற்காக வடமாநில வாலிபர்கள் செல்கின்றனர். இவர்கள் 2025ல் பணியில் இருந்த கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனின் கையெழுத்திட்டது போல், ஒரு 'போலி'யான அனுமதி கடிதத்தை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் காண்பித்து, 'ஆர்ட்' வரைபட வண்ணத்தாள்களை மாணவ, மாணவிகளிடம் விற்பனை செய்து மோசடியாக பணம் பெறுவது தொடர்கிறது. நத்தம் அருகே 3 பள்ளிகள், திண்டுக்கல்லில் 6 பள்ளிகள், வேடசந்துாரில் 2 பள்ளிகள் என 11 பள்ளிகளில் இந்த வாலிபர்கள் 'போலி' கடிதம் காண்பித்து மோசடியாக வியாபாரம் செய்வது தொடர்கதையாகி உள்ளது.
முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ்பாபு கூறுகையில், ''இதுகுறித்து ஆசிரியர் சங்கங்கள் ஆதாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளன. கடந்த வாரத்தில் முதன்மை கல்வி அலுவலகத்திற்கே வந்த வடமாநில நபர் ஒருவர், அம்மாதிரியான இயக்குனரின் கையெழுத்திட்ட போலியான நகலை காண்பித்து பேசினார். நாங்கள் கண்டறிந்து கேட்டபோது, கதறி மன்னிப்பு கேட்டதால் விட்டுவிட்டோம். தற்போது பள்ளிகளில் இம்மாதிரி மோசடியில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தலைமை ஆசிரியர்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இயக்குனரின் கையெழுத்து போலியானது என கண்டறிந்துள்ளோம்.
முதன்மை கல்வி அலுவலரின் வழிகாட்டுதலில் எஸ்.பி.,யிடம் புகார் அளிப்போம்., என்றார். பாக்ஸ் மேட்டர்: போலீசில் புகார் அளிப்பது அவசியம் ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ‛முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் நஷீர் பணியில் இருந்தபோது, வடமாநில வாலிபர் ஒருவர், நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்ட ஆர்டர் நகலில் உள்ள முதன்மை கல்வி அலுவலரின் கையெழுத்தை புகைப்படமாக எடுத்து, அதனை வைத்து போலியாக கையெழுத்திட்ட கடிதத்தை தயாரித்து மோசடியில் ஈடுபட்டார். பின் போலீசாரிடம் சி.இ.ஓ., புகாரளித்ததால் அவர் கைது செய்யப்பட்டார். இதனால் இதில் முதன்மை கல்வி அலுவலர் உடனடியாக புகார் அளிப்பது அவசியம்., என்றனர்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...