ஆந்திரா: அனகப்பள்ளி பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணி ஒருவர் உயிரிழப்பு.
அனகப்பள்ளி - எலமஞ்சிலி அருகே டாடா எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
டாடா எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழப்பு.
தீ விபத்து - காணொளியை காண இங்கே சொடுக்கவும்
ஆந்திராவின் டாடா நகரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஏ.சி. பெட்டிகளில் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் டாடா நகரில் இருந்து கேரளாவின் எர்ணாகுளம் நோக்கி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (18189), நேற்று மாலை புறப்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை 12.45 மணியளவில் ரயில் எலமஞ்சிலி ரயில் நிலையம் அருகே வந்த போது, ஏசி பெட்டி ஒன்றில் கரும்புகை பரவியுள்ளது.
அப்போது பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் இதை யாரும் கவனிக்கவில்லை. சில பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து, கண் விழித்த பயணிகள் பெட்டி முழுவதும் புகை மண்டலமாக மாறியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அவர்கள் சுதாரிப்பதற்குள்ளாக ரயில்பெட்டி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. தீயை பார்த்த பயணிகள் பயத்தில் அலறினர். பின்னர் இதுகுறித்து தீயணைப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள் சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆனால், அதற்குள்ளாக ரயிலின் B2 மற்றும் M 1 பெட்டிகள் தீயில் முழுவதுமாக கருகி உருக்குலைந்தன. பின்னர் உள்ளே சென்ற தீயணைப்பு படை வீரர்கள், அங்கிருந்த பயணிகளை மீட்டனர். எனினும், சந்திரசேகரன் சுந்தரம் என்ற ஒரு பயணி மட்டும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மற்றபடி, யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, அந்த இரண்டு பெட்டிகளும் ரயிலில் இருந்து விடுவிக்கப்பட்டு, ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றது.
தீ விபத்துக்குள்ளான பெட்டிகளில் இருந்த பயணிகள் அவர்கள் செல்லும் இடங்களுக்கு மாற்று ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுவர் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த தீ விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்களை கண்டறிய இரண்டு தடயவியல் குழுக்களை தெற்கு ரயில்வே நியமித்துள்ளது.
உறவினர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்:
எலமஞ்சிலி - 7815909386
அனகபள்ளி - 7569305669
டூனி - 7815909479
சாமல்கோட் - 7382629990
ராஜமுந்திரி - 088 - 32420541; 088 - 32420543
எளூரு - 7569305268
விஜயவாடா - 0866 - 2575167








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...