இதுகுறித்து, தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஓய்வுபெற அனுமதி வழங்கும் போது, அவர்கள் பணியாற்றிய ஒன்றியங்களில் தணிக்கை அறிக்கை பெற்று பின்னர் மாவட்டக்கல்வி அலுவலர் வழியாக பரிந்துரை செய்து பணிக் கொடை விடுவிப்பு ஆணை பெறுவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் பொருட்டு, வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு, மாவட்டக் கல்வி அலுவலர்களே பணிக் கொடை பெற்று வழங்குமாறு தற்போது அறிவுறுத்தப்படுகிறது.
இதையடுத்து, வட்டாரக் கல்வி அலுவலர்கள் பணியாற்றிய அனைத்து ஒன்றியங்களிலும், துறைத் தணிக்கை நடைபெற்று அறிக்கை பெறப்பட்டதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். மேலும், வட்டாரக் கல்வி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கையோ, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையால் தொடரப்பட்ட குற்றவியல் வழக்கோ நிலுவையில் இல்லை என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இதற்கான வழிமுறைகளை பின்பற்றாமல் பணிக்கொடை விடுவிக்கப்பட்டு, பின்னர் தணிக்கையில் வட்டாரக் கல்வி அலுவலர் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ஏதும் இருப்பின், அதற்கு மாவட்டக் கல்வி அலுவலரே முழுப் பொறுப்பாவார் என்பதால் கூடுதல் கவனத்துடன் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...