நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்கவும், தங்கம் இறக்குமதியை குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நகைக்கடை உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறித்த கவலைகள் மற்றும் தங்க இறக்குமதி வரி உயர்வு ஆகியவற்றைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள சுமார் 30,000 நகைக்கடை உரிமையாளர்கள் தங்க நாணயங்கள் விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு நகைக்கடை உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் பி.சபரிநாத் கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தங்க இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தங்க நாணயங்கள் விற்பனையை நிறுத்துவதுடன், தங்கம் சேமிப்புத் திட்டங்கள் மற்றும் இதர விளம்பரத் திட்டங்களையும் ஊக்குவிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் தங்க நகைகள் மீதான இறக்குமதி வரியை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், "ஒரே இரவில் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி (GST) வரியும் உயர்த்தப்படலாம் என வதந்திகள் பரவி வருகின்றன. கடந்த மாதத்தில் மட்டும் இந்திய ரிசர்வ் வங்கி 125 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. நகைக்கடைக்காரர்கள் வங்கிகளில் கடன் பெற்று தொழில் செய்து வரும் நிலையில், தேவை குறைந்தால் கடனைத் திருப்பிச் செலுத்துவது பெரும் சவாலாக மாறும்," என கவலை தெரிவித்தார்.
கோயம்புத்தூர் பொற்கொல்லர்கள் சங்கத் தலைவர் எஸ்.எம். கமல்ஹாசன் கூறுகையில், மத்திய அரசு வரிகளை 10% உயர்த்தியதால், புதன்கிழமை அன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 1,000 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.
தற்போது விற்கப்படும் விலையில் சுமார் 3,000 ரூபாய் வரி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் திருமண சீசன் உச்சத்தை அடைய உள்ள நிலையில், இந்த விலை உயர்வு நுகர்வோரின் வாங்கும் திறனை எப்படி பாதிக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என அவர் கூறினார்.
கோயம்புத்தூரில் மட்டும் சுமார் 35,000 பொற்கொல்லர் பட்டறைகள் உள்ளன, இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தங்க விலை ஏற்ற இறக்கங்களால் கடந்த ஓராண்டில் நகை விற்பனை 60% சரிந்துள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையைச் சீராக்க கூட்டமைப்பு சார்பில் அரசுக்குச் சில முக்கிய பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன:
* மக்களிடம் முடங்கிக் கிடக்கும் சுமார் 25,000 டன் தங்கத்தை மீண்டும் புழக்கத்திற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தங்கம் பணமாக்கும் திட்டங்களில் (Gold Monetisation Schemes) நகைக்கடை உரிமையாளர்களை அரசு ஈடுபடுத்த வேண்டும்.
* டிஜிட்டல் தங்கம் (Digital Gold) மற்றும் இடிஎஃப் (ETF) விற்பனைக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்.
* தங்கம் இறக்குமதியாளர்கள், விநியோக ஏஜெண்டுகள் மற்றும் புல்லியன் டீலர்களின் செயல்பாடுகளை முறைப்படுத்த வேண்டும், என்று வலியுறுத்தி உள்ளனர்.
அந்நியச் செலாவணி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நகைக்கடைக்காரர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இருப்பினும், இந்த திடீர் மாற்றங்கள் சாதாரண மக்களையும், நகைத் தொழிலையும் எந்த அளவிற்குப் பாதிக்கும் என்பது வரும் நாட்களில் தெரியவரும்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...