Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.09.2026

 




திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:50.இடன் அறிதல்

குறள் எண்:494

குறள்:

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.

பொருள்:

தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.

பழமொழி :

One lie makes many.

ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்.

இரண்டொழுக்க பண்புகள் :.

 1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

2. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும். எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்

பொன்மொழி : 

“இன்றே ஒரு திறமையை கற்றுக் கொள்; நாளை அது உன் அடையாளமாக மாறும்.” 🌟

Thought for the Day :

Ozone Day: “Heal the ozone, protect our home.”

பொது அறிவு : 

1. தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகள் எத்தனை? 

316 ஊராட்சிகள்

2. தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் எத்தனை? 

388 ஊராட்சி ஒன்றியங்கள்.  

English words :

Ambiguous – Unclear – தெளிவற்ற


Meticulous – Careful – நுணுக்கமான

புவியியலும் சுற்றுசூழலும் :

காவிரி – தமிழ்நாட்டின் மிக முக்கியமான ஆறுகளில் ஒன்று; காவிரி டெல்டா பகுதி தமிழகத்தின் முக்கிய வேளாண் பகுதியாகும். வேளாண்மைக்காக
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கல்லணை காவிரி ஆற்றின் குறுக்கே சோழ மன்னன் கரிகால சோழனால் கட்டப்பட்டது.கல்லணை கட்டப்பட்ட காலம் பொதுவாக கி.பி. 2ஆம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது.

NMMS :

MAT 

அக்டோபர் 14 ன் 5 நாள்களுக்கு முன்னர் சனிக்கிழமை எனில் , அந்த மாதத்தின் கடைசி திங்கட்கிழமை எந்த தேதியில் வரும்? 

 (1) அக்டோபர் 25.

 (2) அக்டோபர் 26. 

 (3) அக்டோபர் 24. 

 (4) அக்டோபர் 27. 

 விடை: (1) அக்டோபர் 25

செப்டம்பர் 16

அனைத்துலக ஓசோன் படலப் பாதுகாப்பு நாள் (International Day for the Preservation of the Ozone Layer) 

அனைத்துலக ஓசோன் படலப் பாதுகாப்பு நாள் (International Day for the Preservation of the Ozone Layer) ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. சூரியனின் புறஊதாக் கதிர்வீச்சு ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகளில் இருந்து பூமிப் பந்தில் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பது ஓசோன் படலம் ஆகும். இதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான அனைத்துலக நாளாகக் இத்தேதியை தேர்வு செய்து அறிவித்தது.

ஒமர் முக்தார் அவர்களின் நினைவுநாள்




ஒமர் முக்தார் (Omar Mukhtar, 1858 - செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர்.  1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது முதல் இத்தாலி சுமார் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத முக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.

கி. ராஜநாராயணன் அவர்களின் பிறந்த நாள்






கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (16 செப்டம்பர் 1922 – 17 மே 2021),கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். ரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, 98 வயதான கி.ரா. தனது இறுதி காலத்தில் புதுச்சேரியில் வாழ்ந்தார். 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது.

நீதிக்கதை

 🐦 வன்சிகாவின் அன்பு

ஒரு அழகான கிராமத்தில் வன்சிகா என்ற சிறுமி தன் தாயாருடன் வசித்து வந்தாள். அந்தக் கிராமம் முழுவதும் பலா மரங்கள், தென்னை மரங்கள், மாமரங்கள் என பசுமையாகக் காட்சியளித்தது. மஞ்சிகாவின் வீட்டைச் சுற்றிலும் பலவிதமான பறவைகளும் சிறிய விலங்குகளும் வசித்து வந்தன.

வன்சிகாவிற்கு பறவைகள் என்றால் மிகவும் பிடிக்கும். தினமும் காலையில் வீட்டின் வாசலில் சிறிது அரிசியும் தண்ணீரும் வைத்து, “நீங்களும் சாப்பிடுங்கள்” என்று அன்புடன் கூறுவாள்.

ஒருநாள் வன்சிகாவின் உறவினர்கள் அனைவரும் அவளுடைய வீட்டிற்கு வந்திருந்தனர். அவர்கள் வீட்டின் பின்புறம் இருந்த பலா மரத்தின் கீழ் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறிய குருவி காயமடைந்த நிலையில் தரையில் விழுந்திருந்ததை வன்சிகா பார்த்தாள்.

“அம்மா! பாவம் இந்தக் குருவிக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு உதவி செய்வோம்!” என்று வன்சிகா கவலையுடன் கூறினாள்.

தாயார் உடனே அவளுடன் சென்று குருவியை மெதுவாக எடுத்தார். அருகில் இருந்த கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

சில நாட்கள் வன்சிகா அந்தக் குருவிக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து அன்புடன் கவனித்தாள்.

ஒருநாள் குருவி முழுமையாகக் குணமடைந்தது. வன்சிகா அதைத் திறந்த வெளியில் கொண்டு சென்று பறக்க விட்டாள்.

அது வானத்தில் சிறகடித்துப் பறந்ததைப் பார்த்த வன்சிகா மிகவும் மகிழ்ந்தாள்.

அப்போது அவளுடைய தாயார் கூறினார்:

“வன்சிகா, மனிதர்களுக்கு மட்டும் உயிர் முக்கியமல்ல. பறவைகள், விலங்குகள் என எல்லா உயிர்களுக்கும் வலியும் பசியும் பயமும் மகிழ்ச்சியும் உண்டு. அவற்றிடம் அன்பாக நடந்து கொள்வது நம்முடைய கடமை .”

அருகில் இருந்த உறவினர்களும் வன்சிகாவின் செயலைப் பாராட்டினர்.“இனிமேல் நாங்களும் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவும் தண்ணீரும் கொடுத்து அன்பாகப் பார்த்துக் கொள்கிறோம்,” என்று கூறினர்.

அன்றிலிருந்து அந்தக் குடும்பத்தினர் அனைவரும் தங்கள் வீட்டைச் சுற்றியுள்ள உயிரினங்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்கி, அவற்றைத் துன்புறுத்தாமல் அன்புடன் பாதுகாத்தனர்.

🌷 நீதி:

மனிதர்களைப் போலவே அனைத்து உயிரினங்களுக்கும் உயிரும் உணர்வுகளும் உள்ளன. எனவே பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட எல்லா உயிர்களிடத்திலும் அன்பும் இரக்கமும் காட்டி, அவற்றை பாதுகாக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

16.09.2026

🗒️முதல் - அமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து
மாநிலத்தில் 10,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் .

🗒️ரூ.2 ஆயிரம் வரையிலான யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்று மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

🗒️மலேசியாவில் கடற்படை பயிற்சி - ஐஎன்எஸ் மைசூர் கப்பல் பங்கேற்கிறது.

விளையாட்டுச் செய்திகள் 

🏀 உலக டென்னிஸ் தரவரிசை: ரைபகினா முதலிடம்
ரைபகினா அரைஇறுதியை எட்டிய போதே 'நம்பர் ஒன்' இடத்தை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Headlines

🗒️ Investment agreements worth ₹15,300 crore were signed in the presence of Chief Minister Vijay.
More than 10,000 job opportunities will be created in the state.

🗒️ The Union Finance Ministry has ordered that no charges should be collected for UPI transactions up to ₹2,000.

🗒️ Naval exercise in Malaysia:
The Indian Navy ship INS Mysore is participating in the exercise.

🏀 Sports News

🗒️ World Tennis Rankings: Rybakina reaches No. 1. Rybakina secured the No. 1 position after reaching the semi-finals.

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive