NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொதுநுழைவுத்தேர்வு விவகாரத்தில் நீடிக்கும் குழப்பத்துக்கு தீர்வு காண முயற்சி

          மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை: பொதுநுழைவுத்தேர்வு விவகாரத்தில் நீடிக்கும் குழப்பத்துக்கு தீர்வு காண முயற்சி மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி.நட்டா பேட்டி

மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு விவகாரத்தில் நீடித்து வரும் குழப்பத்துக்கு தீர்வு காண மத்திய அரசு முயற்சித்து வருவதாக சுகாதார துறை மந்திரி ஜே.பி.நட்டா கூறினார்.

பொது நுழைவுத்தேர்வு

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க ஒரே மாதிரியான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (என்.இ.டி.டி.) நடத்தவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு கடந்த மாதம் உத்தரவிட்டது.மே 1–ந் தேதி, ஜூலை 24–ந் தேதி என இரு கட்டங்களாக பொது நுழைவுத்தேர்வை நடத்தி முடிக்குமாறு நீதிபதிகள்உத்தரவிட்டனர். அதன்படி, சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) சார்பில் முதல் கட்ட நுழைவுத்தேர்வு கடந்த 1–ந் தேதி நடத்தி முடிக்கப்பட்டது.மாநிலங்கள் கோரிக்கைஇந்த பொது நுழைவுத்தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால், இதற்கு பதிலாக மாநிலங்களே சொந்தமாக நுழைவுத்தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், பொது நுழைவுத்தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி காஷ்மீர், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சார்பிலும், தனியார் மருத்துவ கல்லூரி அமைப்புகளின் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க மாநில அரசுகளோ அல்லது கல்லூரிகளோ தனியாக நுழைவுத்தேர்வு நடத்த முடியாது என்றும், அனைத்து மாநிலங்களும் பொதுநுழைவு தேர்வையே பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கு மட்டுமாவது பொது நுழைவுத்தேர்வு நடத்துவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பல மாநில அரசுகள் தரப்பிலும், எம்.பி.க்கள் தரப்பிலும் மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் தொடர்ச்சியாக வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன.

அவசர சட்டம்

அதன் அடிப்படையில் கடந்த திங்கட்கிழமையன்று மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா தலைமையில் 18 மாநிலங்களின் சுகாதார மந்திரிகள் மற்றும் மூத்த அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பொது நுழைவுத்தேர்வு குறித்து எதிர்மறையான கருத்துக்களை முன்வைத்தன.இது தவிர, மத்திய மந்திரி அருண் ஜெட்லி, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களை ஜே.பி.நட்டா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.இந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் நாடு முழுவதும் இந்த நடப்பு ஆண்டில் மட்டும் பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்யும் வகையில் அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மந்திரி ஜே.பி.நட்டா ஜனாதிபதியை சந்தித்து அவசர சட்டம் கொண்டு வருவதற்கான அவசியம் குறித்து விளக்குவார் என்றும் கூறப்பட்டது.

குழப்பம்

ஆனால், நேற்று முன்தினம் இரவு மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா, ‘‘அது போன்ற திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என்றும், ஜூலை 24–ந் தேதி திட்டமிட்டபடி 2–ம் கட்ட நுழைவுத்தேர்வு நடக்கும் என்றும் தெரிவித்தார்.சுகாதாரத்துறை மந்திரி பேட்டி அளித்த அதே நேரத்தில், தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா, பொது நுழைவுத்தேர்வை இந்த ஆண்டு ரத்து செய்வது குறித்த அவசர சட்டத்துக்கு மத்திய அரசுஒப்புதல் அளித்தது குறித்து தன்னுடைய விவாதத்தில் உறுதிப்படுத்தினார்.மாறுபட்ட இந்த பேட்டிகள் காரணமாக பெரும் குழப்பம் ஏற்பட்டது. மேலும் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணிக்கு குஜராத் முதல்வர் ஆனந்தி பென் பட்டேல் தன்னுடைய டுவிட்டர் வலைத்தளத்தில் பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்ய முடிவெடுத்த மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவிப்பதாக பதிவு செய்தார்.இந்த நிலையில், டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, நுழைவுத்தேர்வை ஒத்திப்போட அவசர சட்டம் கொண்டு வருவதை மிகவும் கடுமையான விமர்சனம் செய்தார். டெல்லி முதல்–மந்திரி கெஜ்ரிவாலும் அவசர சட்டம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

மாநில அரசுக்கான இடங்கள்

ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ள அவசர சட்டத்தில், மாநில அரசுகள் நடத்தும் மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு மட்டுமே இந்த ஆண்டு பொதுநுழைவுத் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க முயற்சி எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசு பொறுப்பில் உள்ள மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்கள் தவிர்த்து மற்ற இடங்களுக்கு பொதுநுழைவுத் தேர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது.இந்த நிலையில் மந்திரி ஜே.பி.நட்டா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

தீர்வு காண முயற்சி

முதல் கட்ட நுழைவுத்தேர்வு மே 1–ந் தேதி நடந்து முடிந்துவிட்டது. இரண்டாவது கட்ட தேர்வு திட்டமிட்டபடி ஜூலை 24–ந் தேதி நடைபெறும். பொது நுழைவுத்தேர்வு குறித்த பிரச்சினையில் நடைமுறை சாத்தியம் உள்ள தீர்வை எட்ட மத்திய அரசு முயற்சித்து வருகிறது. மாநில அரசுகள் இந்த பொது நுழைவுத்தேர்வு குறித்து சில பிரச்சினைகளை மத்திய அரசின் முன்வைத்தன.பொது நுழைவுத்தேர்வை அமல்படுத்தினால் மாநில அரசுகள் நடத்தி வரும் நுழைவுத்தேர்வுகளின் நிலை என்ன? சி.பி.எஸ்.இ. மற்றும் மாநில அரசு போர்டுகளின் பாட திட்டத்தில் உள்ள மாறுபாடு குறித்த பிரச்சினையை எப்படி அணுகுவது? போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு முயற்சித்து வருகிறது.இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.

இன்று  முடிவு

மத்திய மந்திரி இவ்வாறு கூறி இருப்பதால் சில மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த ஆண்டு மட்டும் பொது நுழைவுத்தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.இது தொடர்பான மத்திய அரசின் தெளிவான முடிவு இன்று  (திங்கட்கிழமை) அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive