சென்னை:ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கை, ஒரு மாதத்தில் நடத்த, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக காலியிட விபரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழக பள்ளி கல்வித்துறையில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் இடமாறுதல் கவுன்சிலிங், 'ஆன்லைன்' முறையில் நடத்தப்படும்.கடந்த ஆண்டு கொரோனா தொற்று பிரச்னையால், பள்ளிகளை திறக்க தாமதமானதால், விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. இந்நிலையில், புதிதாக அமைந்துள்ள தி.மு.க., அரசு, ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்த, பள்ளி கல்வித்துறைக்கு அனுமதி வழங்கி உள்ளது.இந்த ஆண்டு பள்ளிகளை திறக்கும் முன், கவுன்சிலிங்கை முடித்து விடவும் திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் துவங்கிஉள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆசிரியர்களின் காலியிட பட்டியலை சேகரிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி, சிறப்பு பாட பிரிவுகள், உடற்கல்வி, கணினி உள்ளிட்ட அனைத்து வகை ஆசிரியர் பதவிகளையும் பட்டியலிட்டு, உடனே இயக்குனரகத்துக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறையும் நிலையில், ஒரு மாதத்துக்குள் அதாவது, ஜூலைக்குள் ஆன்லைன் வழி கவுன்சிலிங்கை நடத்த, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.