தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவர்களும் பயன்பெறும் வகையில் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும் என 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்துக்காக ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பிரபல கணினி நிறுவனங்களிடம் இருந்து தமிழக அரசின் எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியது. இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய ஹெச்பி, டெல், ஏசெர் ஆகிய 3 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான அரசாணை வழங்கப்பட்டது.
15 இன்ச் எல்இடி திரை, 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஹார்டு டிஸ்க், 720 பி ஹெச்டி கேமரா, ப்ளூடூத் 5.0 என நவீன வசதிகளைக் கொண்டுள்ள இந்த மடிக்கணினி ரூ.21,650-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் டிசம்பர் 19-ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்க உள்ளார்.
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய 3 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கும் பணியை முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...