தமிழகத்தில் 2025ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பல மாவட்டங்களில் உண்மைத்தன்மை சான்று இதுவரை வழங்கப்படவில்லை. தேர்ச்சியை பணிப்பதிவேட்டில் (எஸ்.ஆர்.,) பதிவு செய்யாததால் பணப்பலன், பதவி உயர்வு பாதிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
கடந்தாண்டு நவ., 15, 16ல் நடந்த தேர்வை பணியில் உள்ள ஆசிரியர்கள் உட்பட 4.24 லட்சம் பேர் எழுதினர். இத்தாண்டு ஜன., 30ல் முடிவு வெளியானது. தாள் 1, தாள் 2 ஆகிய இரு தேர்வுகளிலும் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 703 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் பணியில் உள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் அடங்குவர்.
அவர்களுக்கு அந்தந்த மாவட்ட சி.இ.ஓ.,க்கள் 'டெட்' தேர்ச்சி சான்றுகான உண்மைத்தன்மை சான்று வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) உத்தரவிட்டது.
இச்சான்று பெற்றால் தான் அதை ஆசிரியர்களின் எஸ்.ஆர்.,ல் பதிவு செய்து பணப்பலன், பதவி உயர்வு பெற முடியும்.
ஆனால் பல மாவட்டங்களில் இச்சான்றுகளை சி.இ.ஓ., அலுவலகங்கள் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளது. இதனால் தேர்ச்சி பெற்று 8 மாதங்களாகியும் அதற்கான பலனை பெற முடியாமல் ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது:
இத்துறையில் ஒரு மாதத்திற்கும் மேலாக ரெகுலர் இயக்குநர் இல்லாததால் மாவட்ட அளவிலான அதிகாரிகள் எந்த உத்தரவையும் உரிய முறையில் பின்பற்றவில்லை. இந்தாண்டு சிறப்பு 'டெட்' தேர்வும் நடந்து அதன் முடிவும் வெளியாக உள்ளது. அதற்குள் 2025ல் தேர்ச்சி பெற்றோருக்கு உண்மைத்தன்மை சான்று வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...