தேசிய அறிவியல்
தினத்தை மிகப் பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என, நாடு முழுவதும் உள்ள உயர்
கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கு யுஜிசி செயலர்
ஜஸ்பால் சாந்து அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
"தேசிய அறிவியல்
தினம்' பிப்ரவரி 28-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 2015-ஆம் ஆண்டுக்கான
அறிவியல் தினம் "நாட்டின் வளர்ச்சிக்கு அறிவியல்' என்ற கருப்பொருளை
மையமாகக் கொண்டு கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த தினத்தை நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் கொண்டாட வேண்டும்.
அந்த நிகழ்ச்சியின்
ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கான அறிவியல் கண்காட்சி, அறிவியல்
சொற்பொழிவுகள், அறிவியல் தலைப்புகளில் ஒலி, ஒளிக் காட்சிகள் போன்ற
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், நூல்கள்
வெளியிடுதல், நாளிதழ்களில் அறிவியல் சிறப்புக் கட்டுரைகளை வெளியிடுதல்,
தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல், அறிவியல்
கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்தல், கல்லூரி, பல்கலைக்கழக மாணவ,
மாணவிகளுக்கு இடையே போட்டிகளை நடத்துதல், விஞ்ஞானிகள், பிற ஊழியர்களின்
குடும்பத்தினருக்கான போட்டிகளை நடத்துவது என்பன உள்ளிட்ட நிகழ்ச்சிகளை
பல்கலைக்கழகங்கள் நடத்த வேண்டும்.
இது தொடர்பாக இணைப்புக் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்கள் அறிவுறுத்த வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...