Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மருத்துவ கல்லூரி வாய்ப்பை இழந்த மாணவிக்கு ரூ. 5லட்சம்: நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது ஐகோர்ட்

          பல் மருத்துவ கல்லூரி யில் சேர்வதற்கான வாய்ப்பை இழந்த மாணவிக்கு, 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கும்படி, தேர்வுக் குழு மற்றும் மருத்துவக் கல்வி இயக்குனரகத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆதிதிராவிடர் வகுப்பு:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்தவர், துர்கா; ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர். மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்திருந்தார். செப்., 30ம் தேதி நடந்த கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும்படி, தேர்வுக் குழுவிடம் இருந்து, துர்காவுக்கு, தகவல் வந்தது. அதன்படி, 30ம் தேதி நடந்த, கவுன்சிலிங்கில் கலந்து கொண்டார். பிற்பகல், 1:30 மணிக்கு, கவுன்சிலிங் நடந்தது. மதுரையில் உள்ள, பெஸ்ட் பல் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான ஒதுக்கீடு கடிதம், 3:30 மணிக்கு வழங்கப் பட்டது. அன்றே, கல்லூரி யில் சேரவும் உத்தரவிடப்பட்டது. அன்றே மதுரைக்கு சென்று சேர முடியாததால், மறுநாள், துர்கா சென்றார். ஒதுக்கீட்டு கடிதத்தை காட்டினார். ஆனால், அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விட்டதாக, கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பல் மருத்துவக் கல்லூரியில் சேர்க்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், துர்கா மனு தாக்கல் செய்தார். துர்கா சார்பில், வழக்கறிஞர் வெங்கடகிருஷ்ணன் வாதாடினார்.

மனுவை விசாரித்த, நீதிபதி ராமசுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு: செப்டம்பர், 17ம் தேதிக்குள், அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் நிரப்பவில்லை எனக்கூறி, அந்த இடங்களில், பெஸ்ட் பல் மருத்துவக் கல்லூரி, தானாக நிரப்பி விட்டது. இது சட்ட விரோதமானது. தேர்வுக் குழுவும், தவறு செய்துள்ளது. 30ம் தேதி கவுன்சிலிங் நடத்தி, அன்று பிற்பகல், ஒதுக்கீடு உத்தரவை வழங்கி, அன்றே மதுரை சென்று கல்லூரியில் சேருமாறு, தேர்வுக் குழு உத்தரவிட்டது. மனுதாரருக்கு சொந்தமாக ஜெட் விமானம் இருந்தால் கூட, அன்றைக்கே மதுரைக்கு சென்று, குறிப்பிட்ட நேரத்துக்குள் கல்லூரியில் சேர்ந்திருக்க இயலாது. உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த கட் - ஆப் தேதியை மீறி, கவுன்சிலிங் நடத்தி, தேர்வுக் குழு தவறு செய்து உள்ளது. விடுபட்ட இடங்களை நிரப்பி, தனியார் பல் மருத்துவக் கல்லூரியும், சட்டவிரோத செயலை செய்துள்ளது. சாதாரணமான சூழ்நிலையில் பார்த்தால், நிவாரணம் பெற, மனுதாரருக்கு உரிமை உள்ளது. ஆனால், இரண்டு காரணங்களுக்காக, என்னால் உத்தரவு பிறப்பிக்க முடியவில்லை. முதலில், காலியிடங்கள் இல்லை; செப்., 30ம் தேதிக்கு பின், மாணவர்கள் சேர்க்கையை நடத்தக் கூடாது என, உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. தேர்வுக் குழு செய்த தவறால், மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளார். ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர். எதிர்காலம் பற்றி கனவுடன் இருந்துஇருப்பார். அந்த கனவு, சில மணி நேரங்களில் தகர்க்கப்பட்டு விட்டது.

நான்கு வாரங்களில்...:

கடந்த செப்., 30ம் தேதி கவுன்சிலிங் நடத்தி, அன்றே ஒதுக்கீடு உத்தரவு வழங்கி, அன்றே மதுரை சென்று கல்லூரியில் சேருமாறு கூறியது, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியது. இதற்கு, மனுதாரருக்கு, நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும். எனவே, 5 லட்சம் ரூபாய், நஷ்டஈட்டை, நான்கு வாரங்களில், மருத்துவக் கல்வி இயக்குனரகம் மற்றும் தேர்வுக் குழு வழங்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி ராமசுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive