மொத்தம் 150 மதிப்பெண்கள் கொண்ட டெட் தேர்வில் தேர்ச்சி பெற பொதுப்பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்ணும் பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 55 சதவீதமும் எடுக்க வேண்டும்.
கடந்த நவம்பரில் நடத்தப்பட்ட டெட் தேர்வில் மட்டும் எஸ்சி வகுப்பினருக்குதேர்ச்சி மதிப்பெண் 40 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாவில்லை. இதற்கிடையே, அண்மையில் அமைச்சர் அன்பில் மகேஸிடம், இதர மாநிலங்களைப்போல் தமிழகத்திலும் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் கோரின.
ஆந்திரா, தெலங்கானாவில் டெட் தேர்ச்சி மதிப்பெண் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீதமாகவும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 40 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஹாரில் ஓபிசி-க்கு 50 சதவீதமாகவும் எஸ்சி, எஸ்டி-க்கு 45 சதவீத மாகவும் உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் ஓபிசி-க்கு 55 சதவீதமாகவும் எஸ்சி, எஸ்டி-க்கு 45 சதவீதமாகவும் இருக்கிறது. ஹரியானா மற்றும் ஒடிசாவிலும் அனைத்து பிரிவினருக்கும் தேர்ச்சி மதிப்பெண் 50 சதவீதமாக உள்ளது.
இந்நிலையில், மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் மதிப்பெண்ணை குறைக்க அரசு முன்வந்துள்ளது. அதன்படி, ஆந்திராவில் இருப்பதைப்போன்று பிசி, எம்பிசி வகுப்பினருக்கு 50 சதவீதமாகவும் (150-க்கு 75 மதிப்பெண்) எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 40 சதவீதமாகவும் (150-க்கு 60) என குறைக்கப்படுகிறது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான 5 சதவீத மதிப்பெண் குறைப்பை கடந்த 2025 டெட் தேர்வில் இருந்தே அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக, தேர்ச்சி பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, டெட் தாள்1-ல்தேர்ச்சி பெற்று 68,756 இடைநிலை ஆசிரியர்களும், தாள் 2-ல் தேர்ச்சி பெற்று 66,660 பட்டதாரி ஆசிரியர்களும் பணியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை பொருத்தவரையில் டெட் தேர்ச்சி பெற்றாலும் அவர்கள் பணிநியமனத்துக்கு மற்றொரு போட்டித் தேர்வை எழுத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...