கல்வித்துறையை உலகத் தரத்திற்கு உயர்த்த விரிவான செயல் திட்டம் - முதல்வரிடம் பாலகுருசாமி அறிக்கை சமர்ப்பிப்பு
தமிழகப் பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித்துறைகளை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி விரிவான செயல் திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளார்.செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவுசார் பொருளாதாரத்தின் எழுச்சியால் உலகளாவிய கல்விச் சூழல் வேகமாக மாறி வருகிறது. இத்தகைய சூழலில், கல்வியின் தரம், ஆராய்ச்சித் திறன் மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில், 2026---2031 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கான விரிவான திட்ட பரிந்துரைகள் இந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளன. அவர் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பள்ளி மாணவர்களின் அடிப்படை வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்த மாநில அளவிலான சிறப்பு இயக்கம் உருவாக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், கோடிங், டிஜிட்டல் கல்வி, நிதி அறிவு, காலநிலை கல்வி மற்றும் தொழிற்கல்வி போன்ற எதிர்காலத் திறன்களை பாடத்திட்டத்தில் இணைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.ஆசிரியர்களுக்கான தொடர் தொழில்முறைப் பயிற்சிக்காக 'ஆசிரியர் சிறப்பு அகாடமிகள்' நிறுவுதல், பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள், இணைய வசதிகள் மற்றும் மாணவர்களுக்கான மனநல ஆலோசனை மையங்களை ஏற்படுத்துதல் ஆகிய திட்டங்களும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
உயர்கல்வித் துறையில், காலியாக உள்ள துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகப் பதவிகளை உடனடியாக நிரப்புதல், பாடத்திட்டங்களை தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தல் மற்றும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்புதல் ஆகியவை முக்கிய பரிந்துரைகளாக இடம்பெற்றுள்ளன. பல்கலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இணைந்து செயல்படும் வகையில் கட்டாய தொழிற்பயிற்சி முறை அறிமுகப்படுத்தப்படுவதுடன், ஏ,ஐ., ரோபோட்டிக்ஸ், சைபர் பாதுகாப்பு, பசுமை ஆற்றல் உள்ளிட்ட துறைகளில் சிறப்பு மையங்கள் அமைக்க வேண்டும்.
மாணவர்களிடையே புதுமை மற்றும் தொழில்முனைவு திறன்களை ஊக்குவிக்கும் வகையில் ஸ்டார்ட்அப் மையங்கள், காப்புரிமை ஆதரவு திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சி நிதி உதவிகளை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்த திட்டங்களைக் கண்காணிக்க முதல்வர் தலைமையில் உயர் மட்ட 'தமிழ்நாடு கல்வி மாற்றுக் குழு' அமைக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டால், தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி அறிவு மற்றும் புதுமை மையமாக உருவாகும் என்றும், கல்வித் தரம் மற்றும் வேலைவாய்ப்பு திறன் குறிப்பிடத்தக்க அளவில் உயரும். இவ்வாறு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...