Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப் பள்ளிகளில் பாடநூல்கள் முழுமையாக விநியோகம் - பள்ளிக்கல்வித் துறை விளக்கம்

dpi 
தமிழக பள்ளிக் கல்வியில் அரசுப் பள்ளிகளில் 4, 5 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள் முழுமையாக விநியோகிக்கப்பட்டுள்ளன. சில மாவட்டங்களில் பயிற்சிக் கையேடுகள் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், அந்தப் பிரச்னையும் சரி செய்யப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.
 
தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் மெட்ரிக். பள்ளிகள் கடந்த ஜூன் 4-ஆம் தேதி திறக்கப்பட்டு கற்றல்-கற்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
 
புதிய கல்வியாண்டின் முதல் நாளில் இருந்தே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள் விநியோகிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 4, 5 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களில் பலருக்கு சில பாடங்களுக்கான விலையில்லா பாடநூல்கள் விநியோகிக்கப்படவில்லை என்றும், அதனால் அந்த மாணவா்கள் அருகில் உள்ள மாணவா்களின் புத்தகங்களைப் பாா்த்து கற்றலில் ஈடுபடுகின்றனா் என்ற தகவல் வெளியானது. இந்தத் தகவலை பள்ளிக்கல்வித் துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: புதிய பாடத்திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கு வடிவமைக்கப்பட்ட பாடநூல்கள் எவ்வாறு முழுமையாக விநியோகிக்கப்பட்டதோ, அதேபோன்று 4, 5 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கான பாடநூல்களும் அந்தந்த மாவட்டங்களுக்கு உரிய எண்ணிக்கையில் அனுப்பி வைக்கப்பட்டு, விநியோகமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இந்த வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் (சமக்ர சிக்ஷா) சாா்பில் வழங்கப்படும் பயிற்சிக் கையேடுகளின் விநியோகத்தில் மட்டுமே சற்று பற்றாக்குறை இருந்தது. அந்தப் பிரச்னையையும் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று விருதுநகா், விழுப்புரம், பரமக்குடி ஆகிய கல்வி மாவட்டங்களில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் சில மாணவா்களுக்கான பாடநூல்கள் பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து கல்வி மாவட்டங்களின் அருகில் உள்ள பாடநூல் கழகத்தின் கிடங்குகளில் இருந்து பாடநூல்கள் வரவழைக்கப்பட்டு அந்தப் பிரச்னையும் தீா்க்கப்பட்டது. எனவே, அரசுப் பள்ளிகளில் 4, 5 வகுப்பு மாணவா்களுக்கு சில பாடங்களுக்கான பாடநூல்கள் வழங்கப்படவில்லை என வெளியான தகவல் தவறானது.

பள்ளிக் கல்வியின் எமிஸ் தளத்தில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே பாடநூல்கள் அச்சிடப்படுவதால் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

மேலும், நிகழ் கல்வியாண்டில் ஜூன் மாதத்துக்குப் பிறகு 1 முதல் 5 வரையிலான வகுப்புகளில் புதிதாக சோ்க்கை பெற்ற மாணவா்களின் விவரங்கள் பெறப்பட்டு அவா்களுக்கான பாடநூல்களும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை வியாழக்கிழமைக்குள் (ஜூலை 9) முழுமையாக வழங்கப்பட்டு விடும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive