இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ளன. இவை ஒற்றைச் சாளர முறையில் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் சேர 2.45 லட்சம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு அவர்களில் 2.36 லட்சம் பேர் தகுதி பெற்றனர். அவர்களது தரவரிசைப் பட்டியல் ஜூலை 1-ம் தேதி வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவில் சிறப்புப் பிரிவினருக்கான (மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள்) இணைய வழி கலந்தாய்வு கடந்த 13, 14 ஆகிய தேதிகளிலும், சிறப்பு பிரிவினருக்கான பொதுக் கலந்தாய்வு 15-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரையும் நடைபெற்றது.
இதன்மூலம் 950 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, பொதுப் பிரிவினருக்கான முதல் சுற்று ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 20-ம் தேதி தொடங்கியது.
இதில், 200 முதல் 171 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள், பொதுப்பிரிவு மற்றும் அரசுப் பள்ளி 7.5% ஒதுக்கீட்டில் தகுதியுள்ள தொழிற்கல்வி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
முதல் சுற்று கலந்தாய்வில் தற்காலிகமாக 32,514 பேருக்கு கடந்த 24-ம் தேதி தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதை உறுதிசெய்ய 25-ம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. 28,550 பேர் தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்தனர்.
இந்நிலையில், 28,550 பேருக்கும் நேற்று காலை 10 மணிக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் டி.புருஷோத்தமன் தெரிவித்தார்.
இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள் ஜூலை 30-ம் தேதிக்குள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரிக்குச் சென்று சேர்க்கைப் பணிகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொறியியல் 2-வது சுற்று கலந்தாய்வு ஆக.3-ம் தேதி தொடங்குகிறது. கட்-ஆஃப் மதிப்பெண் 171 முதல் 135.75 வரை உள்ளவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...